பொள்ளாச்சி - சென்னைக்கு "அம்மா எக்ஸ்பிரஸ்' ரயில்... மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்
சென்னை: அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், மெடிக்கல், உப்பு, மினரல் வாட்டர் வரிசையில், ஒருபடி அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பொள்ளாச்சி - சென்னை இடையே "அம்மா எக்ஸ்பிரஸ்' எனும் பெயரில் புதிய ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
மக்களவையில் புதன்கிழமை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் நேரத்தில் பொள்ளாச்சி தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் பேசுகையில், "பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

இந்த வழித்தடத்தில் மின்மயப் பணியையும் விரைவுபடுத்த வேண்டும். மேலும், பொள்ளாச்சி - சென்னை இடையே "அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரிலும், பொள்ளாச்சி - பெங்களூரு இடையே "ஆனைமலை எக்ஸ்பிரஸ்' என்ற பெயரிலும் புதிய ரயில்களை விட ரயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்டல ரயில்வே கலந்தாய்வு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் மகேந்திரன் பங்கேற்கவில்லை என்றபோதிலும், தனது சார்பில் வழங்கிய புத்தக குறிப்பில், பொள்ளாச்சி முதல் சென்னைக்கு, அம்மா எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெயரில் புதிய ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் மக்களவையில் பொள்ளாச்சி - சென்னை இடையே "அம்மா எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications