ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் வளர்மதி!
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.வளர்மதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பதவியை இழந்த ஜெயலலிதாவின் தொகுதியான, ஸ்ரீரங்கத்தில், வரும் பிப்ரவரி 13ம்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் திருச்சி நகர மாவட்ட அதிமுக இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான, எஸ்.வளர்மதியை வேட்பாளராக அறிவித்தது அதிமுக.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றார் வளர்மதி.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளிலேயே, வளர்மதி தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது, அமைச்சர் டி.பி.பூனாச்சி, மக்களவை உறுப்பினர் பி.குமார், ராஜ்யசபா உறுப்பினர் டி.ரத்தினவேல் ஆகியோரும் உடனிருந்தனர்.
இருப்பினும், தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் கே.பத்மராஜன் இந்த தேர்தலில் முதல் ஆளாக, வளர்மதிக்கு முன்பாகவே, வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார். அவர் நாட்டில் எந்த தேர்தல் நடந்தாலும் சுயேச்சையாக போட்டியிடுவதை வழக்கமாக கொண்டவராகும்.
பிரதான கட்சிகளை பொறுத்தளவில், திமுக தனது வேட்பாளராக ஆனந்த் என்பவரை அறிவித்துள்ளது. இவர் சட்டசபை பொதுத் தேர்தலின்போது ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் நிறுத்தப்பட்டு தோல்வியுற்றவர். பிற கட்சிகள் இன்னும் தங்களது வேட்பாளர் பெயரை இறுதி செய்யவில்லை.