ஆட்சியை விட கட்சியே முக்கியம்... டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
ஆட்சியை விட கட்சியே முக்கியம், கட்சி பிளவுப்பட கூடாது என்று பூவிருந்தவல்லி எம்எல்ஏ ஏழுமலை கூறியுள்ளார்.
புதுச்சேரி: டிடிவி தினகரன் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும் என எம்.எல்.ஏ. ஏழுமலை கூறியுள்ளார். ஆட்சியை விட கட்சியே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19பேர் புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவருமே டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், சசிகலாவிற்கு ஆதரவாகவுமே பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பூவிருந்தவல்லி எம்எல்ஏ ஏழுமலை அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் மிக அற்புதமான தலைவர் என்று கூறினார்.
முதல்வர் பேச வேண்டும்
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக மனிதாபிமானம் மிக்க தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். டிடிவி தினகரன் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும் என எம்.எல்.ஏ. ஏழுமலை தெரிவித்துள்ளார்.
கட்சியே முக்கியம்
ஆட்சியை விட கட்சியே முக்கியம், கட்சி பிளவுப்பட கூடாது என்பதே எங்கள் விருப்பம் எனவும் ஏழுமலை கூறியுள்ளார்.
இந்த ஆட்சி இல்லாவிட்டால், இன்னொரு ஆட்சி அமைத்துக்கொள்ளலாம், ஆனால் கட்சி பிளவுபட்டால் எதுவும் செய்யமுடியாது என்று கூறினார்.
20 பேர் இருக்கிறோம்
9 பேர் மட்டுமே இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசினார் முதல்வர் பழனிச்சாமி. அதே போல 20 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள டிடிவி தினகரனை அழைத்து பேச வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
ஒதுக்குவது ஏன்?
டிடிவி தினகரனையும், எடப்பாடி பழனிசாமியையும் இணைக்க முயற்சி செய்துவருவதாக எம்.எல்.ஏ. ரத்தன சபாபதி தெரிவித்துள்ளார். சசிகலா, தினகரனை காரணமின்றி ஒதுக்கி வைப்பது ஏன் என்றும் கேட்டுள்ளார்.
தினகரன் ஆதரவாளர்
சசிகலா, டிடிவி தினகரன் பின்னால் தான் அதிமுகவினர் நிற்கின்றனர் எனவும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக இருந்த எம்எல்ஏ ரத்தின சபாபதி திடீரென டிடிவி தினகரன் ஆதரவாளராக மாறியுள்ளார்.