மதுரை திமுகவில் ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு சீட்- அழகிரி ஆதரவாளர்கள் சுயேட்சையாக போட்டி
மதுரை: மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலில் மு.க.அழகிரியின் முன்னாள் ஆதரவாளர்களாக இருந்து ஸ்டாலின் ஆதராவளர்களாக மாறிய பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அழகிரி ஆதரவாளர்களும், திமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 100 வார்டுகளில் 7,9,12,40,56,75,97 ஆகிய 7 வார்டுகள் காங்கிரசிற்கும், 5, 86 ஆகிய வார்டுகள் மனிதநேய மக்கள் கட்சிக்கும், 50வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 17, 65 வார்டுகளைத் தவிர 88 வார்டுகளுக்கு நேற்று பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பலருக்கு அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மதுரை திமுக வட்டாரங்களில் சலசலப்பு கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஸ்டாலின் ஆதரவாளர்கள்
மதுரையில் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து பின்னர் மு.க.ஸ்டாலினுடன் சென்ற ஜெயராமன், மிசா பாண்டியன், மூவேந்திரன், எஸ்ஆர் கோபி யின் சகோதரர் போஸ் முத்தையா, வி.கே.குருசாமி, மாணிக்கம் ஆகியோர் அல்லது இவர்களின் உறவினர்களுக்கு சீட் கிடைத்துள்ளது. முன்னாள் மேயர் சின்னசாமியின் மகன், மேயர் வேட்பாளராக போட்டியிட்ட பாக்கியநாதன் உள்பட பலரின் உறவினர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கவுன்சிலர்கள்
மதுரை மாநகராட்சியில் திமுக சார்பில் தற்போது 12 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஜீவானந்தம் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். முபாரக் மந்திரி, எம்.எல்.ராஜ் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அருண்குமார், செங்கிஸ்கான், சசிக்குமார், மாணிக்கம், ராஜேஸ்வரி, நன்னா ஆகிய 9 பேருக்கு சீட் கிடைக்கவில்லை.
பெண்கள் வார்டுகள்
திமுகவில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல வார்டுகள் பெண்களுக்கு மாற்றப்பட்டதால் சசிக்குமார், மாணிக்கம் உள்பட சிலரின் உறவினர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணன், போஸ் முத்தையா, விஜயலட்சுமி, தங்கம் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் மகன் பொன்சேது சீட் கேட்கவில்லை. பி.எஸ்.அப்துல்காதர், அபுதாகிர் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலருக்கு சீட் கொடுக்கவில்லை
அதிருப்தியில் நிர்வாகிகள்
மதுரை வடக்கு மாவட்டத்தில் 39, தெற்கு மாவட்டத்தில் 37, புறநகர் தெற்கில் 13 வார்டுகள், வடக்கில் 11 வார்டுகளில் அந்தந்த மாவட்ட செயலாளர் தலைமையிலான நிர்வாகிகளே வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளனர். கட்சி நிர்வாகிகளுக்கே சீட் வழங்கப் பட்டுள்ளது. இதனால் சில வார்டுகளில் அதிருப்தி நிலவுகிறது.
வடக்கு மாவட்டத்தில் சில வார்டுகளில் கடைசி நேரத்தில் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றம் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அருண்குமார், நன்னா உள்ளிட்ட சிலருக்கு சீட் வழங்கப்படவில்லை. சில வார்டுகளில் எதிர்பார்த்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அழகிரி ஆதரவாளர்கள் சுயேட்சை
இதனிடையே மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான முன்னாள் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து நேற்று 45வது வார்டில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.
இதேப்போல் முபாரக் மந்திரி புதன்கிழமையன்று சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்தார். மேலும் நன்னா உள்பட சிலர் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.