ஜல்லிக்கட்டு தடையால் சோகத்திலும் கோபத்திலும் உறைந்து கிடந்த அலங்காநல்லூர்
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பெரும் சோகத்திலும், கோபத்திலும் உறைந்து போய்க் கிடக்கிறது. யாரும் நமக்கு உதவ முன்வரவில்லையே என்ற ஆதங்கமும், ஏமாற்றமும் அலங்காநல்லூர் மக்களை பெரும் தவிப்புக்குள்ளாக்கியுள்ளது. கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் போனதை துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர் அலங்காநல்லூர் மக்கள்.
வழக்கமாக பொங்கல் நாளன்று அவனியாபுரத்திலும், அடுத்த நாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் விதித்த தடையால் அதை நடத்த முடியாமல் போனது. இந்த ஆண்டும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஆயிலும் பல இடங்களில் தடைகளைத் தகர்த்து ஆங்காங்கே மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை நடந்துள்ளன.

கடும் கோபத்தில் அலங்காநல்லூர்
ஆனால் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூர் கோபத்தில் குமுறிக் கொண்டுள்ளது. அங்கு தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

உண்ணாவிரதம்
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது முதலே அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. தொடர் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

பீட்டாவின் கொடூர முகம்
ஜல்லிக்கட்டுக்கு மட்டும் எதிராக கொதித்தெழுந்து பாரபட்ச முகத்தைக் காட்டி வரும் பீட்டாவுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருப்பு கோலம்
இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்க முடியாமல் போய் விட்டது. இதனால் வாடி வாசல் முன்பு கூடி மக்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர். கருப்புக் கோலமிட்டு எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications