நீட்.. தமிழக அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்! மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு
நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
சென்னை: நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்தக் கூடாது என வலியுறுத்தி இன்று அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் தொடங்கியுள்ளது.
நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிப்பது என்று புதிய சட்ட வரைவை மத்திய அரசு ஏற்பதாக கூறிவிட்டு திடீரென உச்சநீதிமன்றத்தில் நீட் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் ஏற்க முடியாது என்று மத்திய அரசு பல்டி அடித்தது.
இதனால் நீட் தேர்வு அடிப்படையில் செப். 4-க்குள் மருத்துவ கலந்தாய்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன.
இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில் முக ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தினகரன் அணியைச் சேர்ந்தவர்களும், தனது ஆதரவாளர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக திவாகரன் நேற்று அறிவித்திருந்தார்.