ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தேதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் இணைந்த அதிசயம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியான அநாகரீச் செய்திக்கு தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளுமே கடும் குரலில் கண்டனம் தெரிவித்ததன் மூலம் முதல் முறையாக அனைத்துக் கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்த அதிசயம் நடந்தேறியது.
வழக்கமாக ஒரு கட்சிக்குப் பிரச்சினை என்றால் மற்ற கட்சிகள் மெளனமாகவே இருக்கும். ஆனால் இன்றயை விவகாரத்தில் தமிழகத்தையும், தமிழக முதல்வரையும் அவமதிக்கும் வகையிலான செயல்பாட்டை இலங்கை செய்தது என்பதால் அத்தனைக் கட்சிகளுமே ஒரே குரலில் கண்டனம் தெரிவித்தன.
திமுகவே இலங்கையைக் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்ட நிலையில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மட்டும் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து விட்டது.
இலங்கையின் விஷமம்
அண்டை நாட்டுத் தலைவர்களான மோடியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் இணைத்து கீழ்த்தரமான முறையில் இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் ஒரு அநாகரீகமான படத்துடன் கட்டுரையைப் போட்டிருந்தனர்.
கடும் கொந்தளிப்பு
இந்தக் கட்டுரையும், அவர்கள் போட்டிருந்த படமும் கடும் கொந்தளிப்பை தமிழகத்தி்ல் ஏற்படுத்தியது.
போராட்டங்கள்
ஆங்காங்கு இலங்கையின் விஷமச் செயலைக் கண்டித்துப் போராட்டங்கள் வெடித்தன. அதிமுக தரப்பில் அமைதி காக்கப்பட்டது. பெரும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடக் கூடிய வாய்ப்புகளையும் பலர் எதிர்பார்த்திருந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினார். மத்திய அரசும் உடனடியாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரை தொடர்பு கொண்டு இலங்கை அரசிடம் கண்டனம் தெரிவிக்கச் சொன்னது. இந்தியத் தூதரும் இலங்கை அரசிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னரே சுதாரித்தது இலங்கை.
அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக ஆதரவு
இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திமுக முதல் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் ஆதரவு தெரிவித்ததை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
திருச்சி சிவா கண்டனம்
இதுகுறித்து திருச்சி சிவா எம்.பி. கூறுகையில், இதுபோன்ற கட்டுரைகள் வெளியாவதை இலங்கை அரசு தடுக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக, இலங்கை மன்னிப்பு கேட்க வேண்டும்.முதல்வருக்கு எதிரான கருத்தை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் - பாஜக
அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், இலங்கை பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில் யார் கருத்து வெளியிட்டிருந்தாலும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் தமிழிசை
பா.ஜ.க தேசிய செயலாளர் தமிழிசை செளந்திரராஜன் கூறுகையில், பெண் தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனை உலகத்தில் உள்ள பெண் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமானப்படுத்தியது சரியல்ல என்று கண்டித்தார். ராஜ்யசபாவில் இந்த விவகாரத்தை எழுப்பிய சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜாவும் இலங்கையைக் கண்டித்துக் கடுமையாகப் பேசினார்.
பாமக - மதிமுக - நெடுமாறன்
இதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்ட பிற தலைவர்களும் இலங்கையைக் கண்டித்துக் கருத்து தெரிவித்திருந்தனர்.
தேமுதிக பேச்சைக் காணோம்
அதேசமயம் தேமுதிக தரப்பிலிருந்து இதுகுறித்து எந்தப் பேச்சையும் காணோம். ஜெயலலிதாவைத்தானே திட்டினார்கள் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ.
இப்படியே எல்லாப் பிரச்சினையிலும் தமிழகத் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...!