'மரண படுக்கையில்' 108 ஆம்புலன்ஸ்கள்... காப்பாற்றுவார்களா?
நெல்லை: தூத்துக்குடி - நெல்லை மாவட்டங்களில் அவசர சிகிச்சைக்காக அழைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ்கள் சரியான பராமரிப்பு இல்லாததால் முடங்கியுள்ளன.
மத்திய அரசின் 95 சதவீத நிதி மற்றும் மாநில அரசின் 5 சதவீத நிதியுடன் மருத்துவ சேவை பணிக்காக 108 ஆம்புலன்ஸ் இலவச மருத்துவ சேவை இயங்கி வருகிறது. ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பார்க்காமல் இந்த சேவை வழங்கப்படுவதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இதனால் பயன் பெற்று வருகின்றனர். ஏராளமான பிரவசங்களும் 108 ஆ்ம்புலன்சிலேயே நடந்துள்ளன.
ஆம்புலன்ஸ் வாகனத்தில் டிரைவர், மருத்துவ உதவியாளர்கள் இருவர் உள்பட மொத்தம் 3 பேர் பணியில் இருப்பர். மருத்துவ உதவியாளர்கள் முதல் உதவி சிகிச்சை தெரிந்தவர்களாக இருப்பர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் தங்களுக்கு தேவையான ஓய்வு, சம்பளம் உள்ளிட்ட கோரி்க்கைகளை முன்னிறுத்தி இந்தப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இயக்கப்படும் ஆம்புலன்ஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி முடங்குகின்றன. மேலும் சில வாகனங்கள் எப்சிக்காக நிறுத்தப்படுவதால் அவசர தேவைக்காக வாகனங்கள் கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்படுகிறது.
பழுதான வாகனங்கள்...
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 108 ஆம்புலன்ஸ் 21 உள்ளன. இவற்றில் 1 நிரந்தரமாக பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரே நேரத்தில் எப்சி மற்றும் பழுது காரணமாக 5 வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதில் இரண்டு வாகனங்கள் மட்டும் பணிக்கு திரும்பியுள்ளன. 3 வாகனங்கள் இன்னும் திரும்பவில்லை.
பராமரிப்பு பணிக்காக...
நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை, சுரண்டை, வள்ளியூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கய்த்தாறு, கீழ ஈரல், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆம்புலன்ஸ்கள் பராமரிப்பு பணிக்காக செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுளளதாக கூறப்படுகிறது.
கை மீறும் அபாயம்....
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆமபுலன்ஸ்களில் 3 மட்டுமே தற்போது இயங்கி வருகின்றது. இதனால் எங்காவது விபத்து நடந்தால் பக்கத்தில் உள்ள ஆம்புலன்ஸ்களுக்கு தகவல் கொடுக்க முடியாது. வெகுதூரத்தில் இருந்து தான் ஆம்புலன்ஸ் செல்ல வேண்டி உள்ளது. அதற்குள் நிலைமை கைமீறும் அபாயம் உள்ளது.
உடனடி நடவடிக்கை தேவை...
108 ஆம்புலன்ஸ் சேவை உயிர் காக்கும் சேவை. இதில் எந்த உடன்பாடுக்கும், விளக்கத்திற்கும் இடம் இல்லை. ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ஊதியமும், ஆம்புலன்ஸ்சை உடனடியாக பராமரிப்பு செய்து மாவட்ட மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்க வேண்டும் பொதுமக்கள் தவிப்பில் உள்ளனர்.