குறைந்த கட்டணம்: சென்னையில் விரைவில் உதயமாகும் ‘அம்மா தங்கும் விடுதிகள்’!
சென்னை: குறைந்த கட்டணத்தில் பூரண பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ‘அம்மா தங்கும் விடுதிகளை' அமைப்பதற்கான ஆயத்த பணிகளில் சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா திட்டம் இந்த வகையில், தங்களது துறை சார்பில் முதல்வர் ஜெயலலிதா பெயரில் புதிய திட்டங்களை அறிமுகப் படுத்த அமைச்சர் தீவிரம் காட்டி வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
அந்தவகையில், சென்னையில் ‘அம்மா தங்கும் விடுதிகள்' என்ற பெயரில் குறைந்த கட்டண விடுதிகளை அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இது முதல்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைக்கப் பட உள்ளதாக தெரிகிறது.
சென்னைப் பட்டணம்...
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நாள்தோறும் வேலை, படிப்பு, வணிகம் மற்றும் அரசு அலுவலகப் பணிகள் என பல்வேறு காரணங்களுக்காக வெளியூர்களிலிருந்து படையெடுப்போர் ஏராளம்.
எல்லாம் கட்டணம்...
அவ்வாறு வருபவர்கள் சென்னையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் உறவினர்கள் இல்லாதவர்களின் நிலை திண்டாட்டம் தான். அதிக கட்டணம் கொடுத்து தனியார் விடுதிகளில் அவர்கள் தங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.
பாதுகாப்பு ?
அவ்வாறு அதிக கட்டணம் அளித்து தங்கினாலும் பலரது உயிருக்கும், உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பு கிடைப்பதில்லை. எனவே, அச்சத்துடன் தான் அவர்கள் தங்க வேண்டியுள்ளது.
அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்...
இதனைக் கருத்தில் கொண்டு வெளியூர்களிலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் மாணவர்கள், பெண்கள், அலுவலர்கள் என அனைத்து தரப்பினர்களும் தங்குவதற்கும், அவர்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பதற்கும் வசதியாக ‘அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்' அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் நடந்த 2013-14-ம் ஆண்டிற்கான மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது.
‘அம்மா மகளிர் தங்கும் விடுதி’...
இதேபோன்று கிராமப்புறங்களில் இருந்து சென்னைக்கு வந்து தனியாக தங்கி படிக்கும் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனவே, இவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு குறைவான கட்டணத்தில் நிறைவான பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘அம்மா மகளிர் தங்கும் விடுதி' அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இடம் தேர்வு...
அதன் தொடர்ச்சியாக ‘அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்' மற்றும் ‘அம்மா மகளிர் தங்கும் விடுதி' அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்...
இந்நிலையில், தற்போது இடம் தேர்வு செய்யும் பணி நிறைவு அடைந்துள்ளதாகவும், முதற்கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அம்மா தங்கும் விடுதிகள் அமைக்கப் பட உள்ளதாகவும் மாநகராட்சி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் மட்டுமே...
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
‘அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்' மற்றும் ‘அம்மா மகளிர் தங்கும் விடுதி' அமைப்பதற்காக ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் அதாவது ஒரு கி.மீ. சுற்றளவு எல்லைக்குள் கட்டப்படும். அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகளில் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் ஒரு நாள் தங்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
முன்பதிவு....
வெளியூர்களிலிருந்து வருபவர்கள் இந்த விடுதிகளில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னரே போன் செய்து தங்கள் வருகையை பதிவு செய்துகொள்ளலாம். விடுதிகளில் தங்குபவர்கள் அம்மா உணவகத்தில் மலிவான விலையில் சாப்பிட்டுவிட்டு, விடுதிகளில் தங்கி தங்களுடைய பணிகளை தொடரலாம். அனைத்தும் மலிவாக இருப்பதால் வெளியூருக்கு பணம் செலவழித்து வந்ததுபோன்ற ஒரு உணர்வே ஏற்படாது.
ஸ்வர்ண ஜெயந்தி குழு...
இதேபோன்று பெண்கள் மட்டும் தங்குவதற்காக கட்டப்பட உள்ள ‘அம்மா மகளிர் தங்கும் விடுதி'களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளை போன்று பல்வேறு நவீன வசதிகளையும் இந்த விடுதிகள் உள்ளடக்கியிருக்கும். மாநகராட்சியின் ‘ஸ்வர்ணஜெயந்தி' குழுவின் மூலம் மகளிர் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
விரைவில் கட்டுமானப் பணிகள்...
‘அம்மா மாநகராட்சி தங்கும் விடுதிகள்' மற்றும் ‘அம்மா மகளிர் தங்கும் விடுதி'களில் தங்குபவர்களிடம் மிக, மிக குறைவாக பராமரிப்பு செலவு மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும். இந்த இரண்டு திட்டங்களும் பயன்பாட்டிற்கு வந்த உடன் பெண்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மிகுந்த பயன்பெற முடியும். இந்த திட்டங்களுக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.