ஜெயலலிதாவிற்கு ஜெயமான 2015… 5வது முறை முதல்வர்… 6வதுமுறை எம்.எல்.ஏ…
சென்னை: சோதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. தடைகளை தகர்த்து வெற்றி காணும் வாழ்க்கையே சுவாரஸ்யமானது என கடந்த ஜனவரி மாதம் எம்.ஜி.ஆரின் 98வது பிறந்தநாளையொட்டி, அதிமுக உறுப்பினர்களுக்கு பொதுச் செயலாளரும் அப்போது மக்கள் முதல்வராக இருந்த ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஜெயலலிதாவைப் பொருத்தவரை 2014ம் ஆண்டு எப்படி மறக்கமுடியாத ஆண்டோ அதேபோல 2015ம் ஆண்டும் மறக்கமுடியாத ஆண்டுதான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை அடைந்தது ஒருபுறம் அதிமுகவினருக்கு மகிழ்ச்சியான சம்பவம் என்றால், அதேபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியும் ஜெயலலிதாவினால் மறக்கமுடியாத நினைத்து நினைத்து பூரித்து போகக்கூடிய வெற்றிதான்.
சோதனையான 2014
கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியும் எம்.எல்.ஏ பதவியையும் இழந்த ஜெயலலிதா, அக்டோபர் மாதம் ஜாமீனில் விடுதலையாகி வீட்டிற்குள் முடங்கித்தான் போனார்.
வீட்டிற்குள் முடங்கிய ஜெ
போயஸ்கார்டனில் இருந்தாலும் யாரையும் சந்திக்காமல், கட்சி நிகழ்ச்சியிலும் அரசியல் நிகழ்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த ஜெயலலிதாவிற்கு, இந்த ஆண்டின் துவக்கம் வேதனையானதாகவே இருந்தது.
உற்சாகமூட்டிய கடிதம்
சோதனைகள் நிறைந்த அந்த காலகட்டத்தில் ஜனவரி 17ம் தேதி கட்சியின் நிறுவனரும், முதல்வருமான எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதிய கடிதத்தில்தான் சோதனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. தடைகளை தகர்த்து வெற்றி காணும் வாழ்க்கையே சுவாரஸ்யமானது என தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.
5வதுமுறை முதல்வர்
ஆண்டின் துவக்கம் என்னவோ ஜெயலலிதாவிற்கு சோதனையான காலகட்டமாக இருந்தாலும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து மே 11ம் தேதி குமாரசாமியின் தீர்ப்பினால் விடுதலை அடைந்தார். தொடர்ந்து மே 23ம் தேதி 5வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா.
முடிவுக்கு வந்த பங்களாவாசம்
வழக்கில் இருந்து விடுதலை பெற்று முதல்வரானதை அடுத்து ஜெயலலிதாவின் எட்டு மாதகால வனவாச வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஜெயலலிதாவின் விடுதலையை தீபாவளியைப் போல கொண்டாடியதைப் போல மே மாதம் 22ம் தேதி போயஸ்கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியே வந்ததையும் அதிமுகவினர் கொண்டாடினர்.
6வது முறை எம்.எல்.ஏ
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்யவே, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேந்திரனை விட 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 வதுமுறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
வீடியோ கான்பரன்ஸ்
முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றாலும் தலைமைச் செயலகத்திற்கு வருவது என்னவோ சிலமணிநேரங்களாகத்தான் இருக்கிறது. திட்டங்களோ, திறப்புவிழாக்களோ வீடியோ கான்பரன்சிங் மூலம்தான் நடைபெறுகிறது. இதுவே எதிர்கட்சியினரின் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது. ஒருமணிநேர முதல்வர் என்று எதிர்கட்சிகள் வர்ணித்தாலும் ஜெயலலிதாவினை தேர்தல் களத்தில் சந்திக்க சரியான எதிர்கட்சிகள் இல்லை என்றுதான் வர்ணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
2016 ஜெயமாகுமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆனாலும் தலைக்கு மேல் கத்தி என்கிற ரீதியில் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 2016ம் ஆண்டு முதல் விசாரணைக்கு வர உள்ளது. சட்டசபை தேர்தலும் அடுத்த ஆண்டு வர உள்ளது. 2015ம் ஆண்டைப் போல 2016ம் ஆண்டும் ஜெயலலிதாவிற்கு ஜெயமாகுமா? பொருத்திருந்து பார்க்கலாம்.