நாம் தூங்கினாலும் மழை விழித்திருக்கும்.. நின்று விளையாடும்.. தமிழ்நாடு வெதர்மேன்
இன்றிரவு மழை நின்று விளையாடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: டிசம்பர் 1,2015 போல இது ஒரு பலத்த மழை நாள் என்றும், இரவு நாம் தூங்கினாலும் மழை விழித்திருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை கடந்த 30ஆம் தேதி முதல் தீவிரமடைந்துள்ளது. 3 நாள் இடைவெளிக்குப் பின்னர் இன்று பகலில்
வெயில் தலை காட்டிய நிலையில் மதியம் முதல் தொடர்ந்து 6 மணி நேரமாக மழை கொட்டி வருகிறது.
காணும் இடமெங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல் பலரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
வெயிலடித்தாலும் மழை பெய்யும்
இன்று காலையிலேயே வெதர்மேன் தனது பதிவில் வெயில் அடிப்பதால் மழை முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. கடந்த செவ்வாய்க்கிழமையைப் போல், இரவு நேரத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோகூட மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யும் என்று கூறியிருந்தார்.
மழை மேகங்கள் உருவாகும்
இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது அதே பகுதியில் இன்னும் நிலை கொண்டிருக்கிறது. அடுத்த 4, 5 நாட்களுக்கு இதே நிலை தொடரும். இந்த நிலை மழை மேகங்களை திரும்பத் திரும்ப உருவாக்கும். இதனால் மாலை நேரத்தில் மழை வேகமெடுக்கும் என்று கூறியிருந்தார்.
தொடர் மழையால் வெள்ளம்
வெதர்மேன் கணித்தது போல பிற்பகல் முதல் மழை விடாமல் கொட்டுகிறது. இதனையடுத்து அவர் தனது முகநூலில் வெளியிட்ட பதிவில், ''வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் இன்று மாலை வரை நன்கு வெயில் அடித்த நிலையில், அதன்பின் பரவலாக மழைபெய்து வருகிறது.
நேரம் செல்லச் செல்ல வலுவடையும்
இனி, இரவு நேரத்தில் மழை தீவிரமாகும். வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மழை தொடங்கிவிட்டது, நேரம் செல்லச் செல்ல வலுவாக பெய்யும்.
மழை விழித்திருக்கும்
ஒருபுறம் வட சென்னையில் இருந்து மேகங்கள் நகர்ந்தும், மற்றொருபுறம் மேற்குகில் இருந்து நகர்வதால், நேற்று இரவுபோல் லேசான மழையாக இல்லாமல், இரவு முழுவதும் மழை 'நின்று விளையாடப் போகிறது', நாம் தூங்கினாலும் மழை விழித்திருக்கும்'' என்று அவர் கூறியுள்ளார்.
பலத்த மழை நாள்
டிசம்பர் 1, 2015ஆம் தேதியைப் போல இது ஒரு பலத்த மழை நாள். கடந்த 2 மணிநேரத்தில் பல பகுதிகளில் 100 மி.மீ மழை பெய்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான். வெதர்மேன் கணிப்பு பொய்த்து போனதில்லை எனவே சென்னைவாசிகளே பத்திரமாக இருங்கள்.