திருச்சி சுங்க அலுவலகத்திலிருந்து மேலும் 15 கிலோ தங்கம் மாயம்.. 2 பேரிடம் விசாரணை
திருச்சி: திருச்சி சுங்க இலாகா அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கம் மாயமான விவகாரம் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த மேலும் 15 கிலோ தங்கத்தைக் காணவில்லை என்று பரபரப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் காரில் கடத்தப்பட்ட 18.5 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்க கட்டிகள் திருச்சியில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் இருக்கும் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டது. இது குறித்த வழக்கு திருவாரூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடத்தல் தங்கத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க கடந்த 18ம் தேதி பெட்டகத்தை திறந்து பார்த்தபோது அதில் வெறும் 3.5 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 15 கிலோ தங்க கட்டிகள் மாயமாகியிருந்தது.
தங்க கட்டிகள் மாயமானது குறித்து சென்னையில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம் சுங்கத்துறை மண்டல ஆணையர் ஜானி புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தங்கம் மாயமானது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் முகமது பாரூக், செந்தில் குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது அதே அலுவலகத்திலிருந்து மேலும் 15 கிலோ தங்கத்தைக் காணவில்லை என்று புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. சில்லரை விற்பனை பிரிவு மற்றும் சுங்க சேமிப்பு பிரிவில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்த போது, அங்கிருந்த 15 கிலோ தங்கம் மாயமானது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து 2 பேரைப் பிடித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.