கடல்ல போய் தேடு.. இங்க என்ன பண்ணுற.. பொட்டில் அடித்தாற் போல கேட்கும் கன்னியாகுமரி சகோதரி!
நாகர்கோவில்: மீனவர்களுக்காக இந்த அரசு ஏன் பதட்டப்படவில்லை. மீ்னவர்களை புயல் அபாயத்திலிருந்து முன்கூட்டியே காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. புயலின் வேகத்தை ஏன் சரியாக மீனவர்களுக்கு அறிவிக்கவில்லை என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி.
இவர் கேட்கும் கேள்விகள் அத்தனை தெளிவாக உள்ளன. துல்லியமாக உள்ளன. பதில் கூறத்தான் அரசுத் தரப்பில் யாரேனும் இருப்பார்களா என்பது தெரியவில்லை
அவரது பேச்சிலிருந்து சில துளிகள்:
கடல்ல போய் தேடு. இங்க என்ன பண்ணுற. உயிர் பிழைத்திருந்தாலும் கூட அந்த மீனவனை மரண பயமே ஆட்டிப் படைச்சிருக்குமே. எத்தனை புயலைத்தான் தாங்குவாங்க எங்க மக்கள். எங்கள் உடல் சீக்கிரம் கெட்டுப் போகாது.
நாங்கள் ஆண்டாண்டு காலம் மீினவர்கள். எங்கு ஜாதி, மதம் இல்லை. மீனவர்கள் ஜாதி பார்க்க மாட்டோம். மீனவர்கள் கடைசி வரை மீனவர்கள்தான். என்னைக்குமே. எல்லோருக்கும் மீனவன் வருகிறோம். ஆனால் எங்களுக்கு யார் வருவா.
கரண்ட் இல்லாமல் 8 நாள் இருந்தோம். உயிரைக் கொண்டு வந்து தர முடியுமா. போன உயிரைத் தாங்க. நாங்க போராட்டம் விட்டு விடுகிறோம். எனக்கு 32 வயதாகிறது. இதுவரை இப்படி ஒரு புயலைப் பார்த்ததில்லை.
செத்த பிறகு எலும்புகளையா தேடி தர போகிறது இந்த அரசு. எங்கள் மீனவனை மீட்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறது நேவி படை
இத்தனை நாடிகல் அளவு தான் போக வேண்டும் என்று அரசு முன்பே தெரிவிக்க வேண்டும். அதன் பின் மீனவர்கள் போனால் அரசு பொறுப்பு எடுக்காது என்று சொல்லுங்கள். அப்படிச் செய்தால் பரவாயில்லை. எதுவுமே சொல்லலையே.
புயலின் வேகத்தை சரியாக அரசு கூறாமல் எங்கள் மீனவ சமுதாயத்தையே உயிரோடு தண்ணீரில் ஜல சமாதி செய்ய அரசு நினைத்து விட்டது.
படிக்காத மீனவனும் உண்டு. படித்த மீனவனும் உண்டு. எங்களை வழிநடத்த வேண்டும் புயலயைப் பார்க்காத மீனவனா?. மறைச்சுட்டீங்க புயலோட வேகத்தை. அதைச் சொல்லியிருக்க வேண்டாமா. வீடாக இருந்தால் எதையாவது பிடித்துத் தப்பலாம். கடலில் எதைப் பிடித்துத் தப்ப முடியும்.
நாங்கள் நிவாரணம் கேட்கவில்லை. நிவாரணம் தேவை இல்லை எங்களுக்கு. தேவையானது எங்கள் வாழ்வாதாரம் மட்டுமே. அதை இழந்தால் என்ன செய்ய முடியும் என்று சரமாரியாக கேட்டுள்ளார் அப்பெண்.