அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு உடனடி டிஜிட்டல் உரிமம் தேவை... மத்திய அரசுக்கு ஜெ. கடிதம்
சென்னை: தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தாமதமின்றி டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
டிஜிட்டல் உரிமம் பெற தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு சட்டப்படி முழு தகுதி உள்ளது. டிஜிட்டல் உரிமம் தரப்பட்டால்தான் ஏழை, நடுத்தர மக்கள் தரமான கேபிள் சேவை பெற முடியும்.
டிஜிட்டல் உரிமம் கோரி கடந்த 2012ஆம் ஆண்டு மத்திய அரசிடம் அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்தது. அரசு கேபிளுக்கு பின்பு விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு இதுவரை டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை.
முன்பு பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியும் உரிமம் வழங்கபடவில்லை. தனியாரின் வர்த்தக நலனுக்காக கடந்த அரசு உரிமம் வழங்கவில்லையோ என சந்தேகம் எழுகிறது.
மேலும், தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் ரூ.70 கட்டணத்தில் 100 சேனல்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது' என இவ்வாறு ஜெயலலிதா தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.