"லாஸ்ட் மினிட்ல" போச்சே.. "பவர்" குறையுதா எடப்பாடிக்கு..பன்னீர் புயல்.. "ஹெட்ஆபீஸ்ல" என்ன சொல்றாங்க?
சென்னை: ஓபிஎஸ்ஸை பாஜக கைவிட்டுவிட்டதா? அமித்ஷா ஏன் அப்படி சொன்னார்? எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி கணக்குதான் என்ன என்பது குறித்த பல சந்தேகங்கள் வட்டமிடுகின்றன.
கடந்த வாரம் டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி செல்லும்போது, ஒருங்கிணைந்த அதிமுக என்ற விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியிருக்கிறார்..
அப்போதும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அமித்ஷா தந்துள்ள பேட்டி, மிகப்பெரிய அதிர்வலையை அதிமுகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது..
அமித்ஷா சுளீர்: "அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட விரும்பவில்லை, அது அவர்களது உள்கட்சி விவகாரம். ஓபிஎஸ்ஸை சேர்க்க நாங்கள் வலியுறுத்த மாட்டோம், அவர்கள் இருவருமே தங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.. ஒரு கட்சியின் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதை பாஜக எப்போதுமே விரும்பியது இல்லை. அதனை தரக்குறைவான செயலாகவே கருதுகிறோம்.. அதிமுகவினர்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது" என்று அமித்ஷா சொல்லி உள்ளார்.

நெருக்கடி: அமித்ஷா இவ்வாறு பேசியிருப்பது, எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அதேசமயம், நெருடலை ஏற்படுத்தி உள்ளது... காரணம், அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சினை என்று மட்டுமே அமித்ஷா சொல்லி ஒதுங்கிவிடவில்லை.. "பேசி தீர்த்து கொள்ள வேண்டும்" என்பதையும் வலியுறுத்தி உள்ளார்.. பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும், அடுத்து அவர் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு முன்பைவிட இப்போது அதிகமாகவே எழுந்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பில் மறுபடியும் அதிமுகவுக்கு தூது விட்டுள்ளதாக தெரிகிறது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ வழக்கம்போல், அவர்களுக்கு கட்சியில் இடமில்லை என்று கறாராக சொல்லி வருகிறார்.. எனினும், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் இணைப்பது குறித்து 2 வேறு கருத்துக்கள் அதிமுகவுக்குள்ளேயே வட்டமிட்டு வருகின்றன..
அதிமுகவின் மேல்மட்ட தலைவர்களை பொறுத்தவரை மறுபடியும் கட்சியில் சேர்த்துக்கொள்வது சரியாக இருக்காது என்கிறார்களாம்.. காரணம், தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக கட்சிக்கு எவ்வளவு நெருக்கடி வந்தாலும் பரவாயில்லை என்ற ரீதியில் பல்வேறு சட்ட நெருக்கடிகளை கொடுத்து வந்தவர் ஓபிஎஸ்..
ஆதரவு வட்டம்: இப்போதுதான், மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி, கட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுபடுத்தி இருக்கிறோம்.. மறுபடியும் அவர் கட்சிக்குள் வந்தால் தன்னுடைய தலைமையில் தனித்தே செயல்பட வாய்ப்பு உள்ளது... அதுவுமில்லாமல், அவரது ஆதரவு வட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு பதவிகள் பெற்றுத்தர மறுபடியும் முயற்சிகளை மேற்கொள்வார்.. இதெல்லாம் மறுபடியும் கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்..

சசிகலா, தினகரன் மீது இப்போதுவரை ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.. மறுபடியும் அவர்களை அரவணைக்க முயற்சிப்பார்.. அதேபோல முக்கியமான முடிவுகளை தலைமை எடுக்க நேர்ந்தால், அதற்கு ஓபிஎஸ் ஆதரவு தருவாரா? என்று தெரியவில்லை.. அதனால், ஓபிஎஸ் அதிமுகவுக்குள் வராமல் இருப்பதே சரியாக இருக்கும்" என்ற காரணங்களை சீனியர்கள் அடுக்குகிறார்கள்.
அதிகார வரம்பு: ஆனால், மற்றொரு தரப்போ அதாவது தொண்டர்கள் தரப்பிலோ இதற்கு மாறுபட்ட கருத்துக்கள் உலா வருகின்றன.. குறிப்பாக, "ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு கூடுதல் பலம் தேவை.. பொதுச்செயலாளர் ஆகிவிட்டதால் எடப்பாடி பழனிசாமியும் முன்பு போல் இருக்கமாட்டார். ஓபிஎஸ் கட்சிக்குள் இருந்தால் மட்டுமே இந்த நிலைமையை சமாளிக்க முடியும்.. அதிகார வரம்பை கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும்.. தன்னுடைய கொங்கு மண்டலத்துக்கு மட்டுமே பெருவாரியான நலனை எடப்பாடி பழனிசாமி பெற்று தந்த நிலையில், இப்போது பொதுச்செயலாளராகி விட்டதால், இன்னும் அதிகமான "பலன்கள்", கொங்குவுக்கே செல்லக்கூடும்.
முக்குலத்தோர்: அவ்வளவுஏன், அமித்ஷாவை கடந்த வாரம் சந்திக்க டெல்லி சென்றபோதுகூட, தன்னுடன் கொங்கு மண்டல தலைவர்களை மட்டுமே உடன் அழைத்து சென்றுள்ளார்.. இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தொடர்ந்து முக்குலத்தோர் புறக்கணிக்கப்படுவதாக அந்த சமூகத்தினர் எடப்பாடி மீது அதிருப்தியில் உள்ளார்கள்.. வன்னியர் சமூகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டிருந்த நிலையில், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாருமே அந்த குழுவில் இல்லை..
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். சீனியர் என்பதால் மீனவர் சமூகத்தை சேர்ந்த ஜெயக்குமாரை அழைத்து சென்றிருக்கிறார். இதில், முக்குலத்தோர் சமூகத்தில் செல்வாக்காக இருப்பவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். அவருக்கும் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. அதேபோல, உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றவர்களையும் அழைத்து செல்லவில்லை. கட்சியின் முழுமையான தலைவராகிவிட்ட பிறகும்கூட, இப்படியான புறக்கணிப்புகள் சலசலப்பை கூட்டி வருகிறது.

புறக்கணிப்புகள்: பொதுச்செயலாளராகி உள்ளநிலையில், இனி இந்த புறக்கணிப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும்.. எனவே, ஓபிஎஸ்ஸுக்கு ஏதாவது ஒரு பதவியை தர வேண்டும்.. பாஜகவுடன் கூட்டணியை அதிமுக விரும்புகிறது என்றால், பாஜக விரும்பும் பன்னீர்செல்வத்தையும் கட்சிக்குள் இணைப்பதில் தவறில்லை.. வேண்டுமானால் நிபந்தனைகளின் பேரில் ஓபிஎஸ்ஸை கட்சியில் இணைத்து கொள்ளலாம்..
"பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களை தவிர்க்க முடியாது" என்று அண்ணாமலை சூசகமாக சொல்லி உள்ளதும் இதை மனதில் வைத்துதான்.. இது எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றாகவே தெரியும்.. அதுமட்டுமல்ல, திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் தற்போது இருந்தும்கூட, அதிமுக பிரச்சனையால், அதை முழுமையாக பயன்படுத்தி கொள்ளாமல் உள்ளனர்.. அதனால்தான், ஓபிஎஸ் இங்கு இப்போது தேவையாக இருக்கிறார்" என்கிறார்கள்.
என்னதான் வழி: ஆக, ஓபிஎஸ்ஸூக்கு இருவேறு கருத்துக்கள் நிலவிவரும்நிலையில், அவர் என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.. பாஜகவின் அழுத்தமும் இனி மறைமுகமாக இருக்குமா? என்று தெரியவில்லை.. உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னதுபோல, அதிமுகவுக்குள்ளேயே இவர்கள் ஒன்றுகூடி பேசி தீர்த்து கொள்வதுதான் ஒரே வழி... என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications