கடலூரில் இடைவிடாத கனமழை நீடிப்பு: வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள் - மீட்புக்கு விரைந்தது ராணுவம்!!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒருவாரகாலமாக இடைவிடாமல் பெய்துவரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக ராணுவம் விரைந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் 20,000 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை படகு மூலமாக தீயணைப்பு வீரர்கள், கடலோர காவல்படையினர், போலீசார் மீட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

இது தவிர முன்எச்சரிக்கையாக தாழ்வான பகுதி மக்களும் வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனால் தாழ்வான பகுதி மக்கள் அந்தந்த பகுதியில் உள்ள முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். நேற்று இரவு விடிய, விடிய கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அத்துடன் என்.எல்.சி.யில் இருந்து திறந்துவிடப்பட்ட மழை வெள்ளமும் கிராமங்களை சூழ்ந்தது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17 செ.மீட்டர் மழை பெய்து உள்ளது
இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்றும் வடமாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இதனைத் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு ராணுவம் அனுப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்திற்கு 120 பேர் கொண்ட 2 ராணுவ குழுக்கள் விரைந்துள்ளன.












Click it and Unblock the Notifications