விஸ்வரூபம் எடுக்கும் கட்டண உயர்வு- ரயில்வே வருவாய் விர்
தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் ரயில்வே துறைக்கு வருமானம் அதிகரித்துள்ளது.
நெல்லை: தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் ரயில்வே துறைக்கு வருமானம் அதிகரித்துள்ளது. மேலும் ரயில்வே துறையும் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைத்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடியில் பஸ் கட்டண உயர்வு காரணமாக மாணவ, மாணவிகள், தொழிலாளிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் தற்போது பாசஞ்சர் ரயிலை நாட துவங்கியுள்ளனர். நெல்லை-செங்கோட்டை செல்லும் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நான்கு நாட்களாக அலைமோதி வருகிறது.
மாலையில் நெல்லையிலிருந்து செங்கோட்டை வரும் ரயில்களிலும் இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அலைமோதுவதால் ரயில்வே துறை திணறி வருகிறது. இதையடுத்து மாலை முக்கிய வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை-ராமேஸ்வரம் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் முதல் கட்டமாக இணைக்கப்பட்டன.
அதற்கு அடுத்தப்படியாக செங்கோட்டையிலிருந்து நெல்லை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் 17 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் இன்னும் ஒரு பெட்டி இணைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை-செங்கோட்டை மார்க்கத்தில் மீதமுள்ள ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை-தென்காசி வழித்தடத்தில் இயங்கும் சாதாரண பஸ்கள் கட்டண உயர்வு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். ரயில்களில் தென்காசியிலிருந்து நெல்லைக்கு செல்ல ரூ.20 தான் என்பதால் கூட்டம் அலைமோதி வருகிறது.