ஜெயலலிதாவுக்கு டிச.5 வரை சிக்கலான நேரம்... சொல்வது ஜோதிடர்கள்!
முதல்வர் ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 4ம் தேதிவரை நேரம் சரியில்லை என்றும் 5ம் தேதிக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றும் ஜோதிடர்கள் நேரம் குறித்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 75 நாளாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டிசம்பர் 5ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் ஒருநாளில் முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்களிடம் விவாதிக்கப்பட்டது. அப்போது, சிகிச்சை முழுமை அடையும் வரை, ஜெயலலிதா பூரண உடல்நலம் பெறும் வரை மருத்துவனையில் இருப்பதே நல்லது என்று சனிக்கிழமையன்று எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ஆலோசனை கூறினர். இதனையடுத்து ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் தேதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்வரின் உடல்நிலையில் மீண்டும் பாதிக்கப்பட்டது. நேற்று மாலையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர். அதிகாலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இன்று காலை ஆறு மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சசிகல நடராஜன் தங்கி இருக்கும் அறைக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், முன்னாள் காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரும் சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 4 வரை ஜெயலலிதாவுக்கு சிக்கலான நேரமாக உள்ளது என்று ஜோதிடர்கள் எச்சரித்தது போலவே முதல்வர் ஜெயலலிதா மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை ஜெயலலிதா கடந்து விட்டால் அவருக்கு பாதிப்பு இல்லை என்றும் கூறியுள்ளனர். ஜெயலலிதா பூரண நலமடைந்து மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாகும.