மீட்டர் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்...நெல்லையில்!
நெல்லை: ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை மறுபரீசிலனை செய்ய கோரி நெல்லையில் ஆட்டோக்கள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டதால், அங்குள்ள மக்கள் திண்டாட்டத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் தொடர்பாக பல்வேறு புகார்கள் சென்றதன் அடிப்படையில் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு திருத்தி அமைத்தது. கண்டிப்பாக மீட்டர் பொருத்தி அதன் அடிப்படையில் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை வெளியிட்ட அட்டவணையில், 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25 என்றும், அடுத்து செல்லும் ஓவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 என்றும் வசூலித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆட்டோக்களுக்கு வெயிட்டிங் சார்ஜ் 2 நிமிடத்திற்கு ரூ.3.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பயணம் என்றால் 30 சதவீத கூடுதல் கட்டணம் வசூலித்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண விகிதத்தை பல ஆட்டோ டிரைவர்களும் எதிர்த்து வரும் நிலையில் அரசு மீட்டர் பொருத்தும் விவகாரத்தில் உறுதியாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.40 என நிர்ணயிக்க வேண்டும். கிலோ மீட்டருக்கு ரூ.20 கூடுதல்கட்டணாக வசூல் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், விலையில்லா மீட்டர் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஆட்டோக்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை உள்பட பல்வேறு முக்கிய பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.