"கேப்டனை" விட்டு விலகியும் ரமணா எபக்ட் விலகாத "மாஃபா".. புள்ளி விவரங்களை அடுக்கி பேச்சு.. ரசித்த ஜெ!
சென்னை: சட்டசபையில் அதிமுக உறுப்பினர் மாஃபா பாண்டிய ராஜன் ரமணா விஜயகாந்த் பாணியில்
புள்ளி விவரங்களுடன் பேசியதை முதல்வர் ஜெயலலிதா ரசித்து கேட்டதோடு மேஜையை தட்டி உற்சாகப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமையன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய பாண்டியராஜன், கடந்த 5 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனைகளை புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டார்.
அரசு நிர்வாகத் திறமையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாடு தொலை நோக்குத் திட்டம் 2023ன் இலக்குகளை 2021லேயே தமிழக அரசு எட்டிவிடும் என்று கூறினார்.
தமிழகம் முன்னிலை
தமிழக அரசின் நிதிநிலை நல்ல நிலையில் இருப்பதாலேயே உலக வங்கி கடன் கொடுக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் துறையில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என்றார் பாண்டியராஜன்.
பாண்டியராஜன் கோரிக்கை
ஆவடி சட்டசபை தொகுதியில், டைடல் பார்க் அமைக்க வேண்டும். இத்தொகுதியில், 18 புராதன கோவில்கள் உள்ளன. எனவே, ஸ்ரீரங்கம் போல் ஆவடியை ஆன்மிக ஸ்தலமாக உருவாக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை, ஆவடி வரை செயல்படுத்த வேண்டும்.
புள்ளிவிபரம்
இந்தியாவில் பரப்பளவில், தமிழகம், நான்கு சதவீதம் உள்ளது. மக்கள் தொகையில், ஆறு சதவீத்தை கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் தமிழகம், 9.6 சதவீதம் பெற்றுள்ளது என்று கூறிய பாண்டியராஜன், இதை சாதித்தது, முதல்வர் ஜெயலலிதா என்றார்.
உற்சாக ஜெயலலிதா
சட்டசபையில் 30 நிமிடங்கள் பேசினார் பாண்டியராஜன். அவரது பேச்சை முழுமையாக கேட்ட முதல்வர் ஜெயலலிதா, பல முறை மேஜையைத் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம்.