கேட்காமலே கொடுத்த பதவியை கேட்காமலே எடுத்துக்கொண்டனர்: அழகிரி வேதனை
மதுரை: 'என்னைக் கேட்காமலேயே தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை கொடுத்தனர், அதேபோல் என்னைக் கேட்காமலேயே அதனைப் பறித்துக் கொண்டனர். குழந்தைக்கு காது குத்தும் போது அது அடையும் வேதனையைப் போன்று, கட்சியிலிருந்து நீக்கப் பட்டதால் மனது வலிக்கிறது' என வேதனை தெரிவித்துள்ளார் மு.க.அழகிரி.
சமீபத்தில் கட்சி விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டார் திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி.
இந்நிலையில், மதுரை 9-ம் பகுதி தி.மு.க. செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.ராமலிங்கம்-மாரி தம்பதியரின் மகன் ராம் குமாருக்கும், 82-வது வட்ட தி.மு.க. செயலாளர் சிம்மக்கல் ஆர்.ராஜேந்திரன்-இந்திரா காந்தி தம்பதியரின் மகள் ராமலட்சுமிக்கும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.
அத்திருமணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அழகிரி. அப்போது அவர் பேசியதாவது :-
தி.மு.க. தொண்டர்கள் கட்சியை நேசிப்பதுபோல் என்னையும் நேசிக்கின்றனர். கட்சியில் தவறு செய்யாதவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது புரியவில்லை. யாரோ போஸ்டர் ஒட்டினார்கள் என்பதற்காக கட்சியில் இருந்து நிர்வாகிகளை நீக்கியது வருத்தம் அளிக்கும் செயலாகும்.
இதனை தலைமையிடம் நியாயம் கேட்பதற்காக சென்றேன். அதற்காக என்னையும் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்து விட்டார்கள். தனியார் தொலைக்காட்சியில் நான் பேட்டி கொடுப்பதாக போஸ்டர் ஒட்டியவர்களையும் நீக்கி விட்டனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகளை நீக்குவது வருத்தம் அளிப்பதாக இருக் கிறது. இப்படி கட்சி நிர்வாகிகளை நீக்கி விட்டு நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பார்கள்''என இவ்வாறு வேதனை தெரிவித்தார்.
திருமண விழாவைத் தொடர்ந்து வில்லாபுரத்தில் நடந்த விழாவில் ஒன்றில் கலந்து கொண்ட அழகிரி, அங்கு பேசியபோது, 'குழந்தைக்கு காது குத்துவது எப்படி வேதனையை தருமோ, அதே போல் கட்சியில் இருந்து நீக்கியது நெஞ்சில் வேதனையை ஏற்படுத்தியது. ஒரு ஒன்றியத்தில் குறைகளை கூறி நியாயம் கேட்டேன். உடனடியாக நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். இது தலைவருக்கு தெரிந்து நடக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை.
மதுரை உள்பட பல மாவட்டங்களில் கட்சி தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் கூறினேன். பொறுமை காக்கும்படி தெரிவித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் எழில்மாறன், பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.
இதுபோல் மதுரையில் பல நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். நான் கேட்காமல் கொடுத்த தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை என்னிடம் கேட்காமலேயே எடுத்துக்கொண்டனர்''என இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.