சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாக்கும் நாய்க்கு பாசத்துடன் வளைகாப்பு நடத்திய மதுப்பிரியர்கள்
சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாக்கும் நாய்க்கு மதுப்பிரியர்கள் வளைகாப்பு நடத்தி உள்ளனர்.
சிவகங்கை : சிவகங்கையில் டாஸ்மாக் கடையை பாதுகாத்து வந்த பெண் நாய் கருவுற்றதை தொடர்ந்து அதற்கு வளைகாப்பு நடத்தி நெகிழச் செய்து உள்ளனர் மதுப்பிரியர்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை அருகே மதகுபட்டி ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இதன் அருகில் தனியார் பார் ஒன்றும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த பாரில் ஆதரவற்ற பெண் நாய்க்குட்டி ஒன்று தஞ்சம் அடைந்தது. பாரில் குடிப்பிரியர்கள் தின்றுபோடும் மீதமுள்ள உணவு வகைகளை உண்டு வளர்ந்த நாய் பாருக்கு விசுவாசமாக காவல் காக்கும் பணியை தொடங்கியது.
இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டதும் கடை வாசலில் படுத்துக்கொண்டு, கடையை காவல் காக்க தொடங்கியது. நாயின் விசுவாசமான காவல் பணியை பார்த்து வியப்படைந்த பார் ஊழியர்கள் அதற்கு கருத்தம்மா என்று செல்லமாக பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்,
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த நாய் கருவுற்றதை அறிந்த ஊழியர்கள் தங்கள் நன்றியை காட்ட அதற்கு வளைகாப்பு நடத்த தீர்மானித்தனர். இதனால் நேற்று காலை அப்பகுதியில் உள்ள நண்பர்கள், வாடிக்கையாளர்களுக்கு வளைகாப்பு நடத்தவுள்ளதை தெரிவித்தனர்.
சிலர் அதை கேலி செய்தாலும் ஒரு சிலர் அதற்கு மனமுவந்து பணம் கொடுத்த உதவி செய்தனர். காலையில் அந்த நாயை குளிப்பாட்டி துண்டு, மாலைகள்,மல்லிகைப்பூ அணிவித்து சந்தனம், குங்குமம் நெற்றியில் இட்டு கால்களில் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தி உள்ளனர்.
வளைகாப்பு நிகழ்சிக்கு வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் வந்திருந்தவர்களுக்கு மதுவுடன், பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது. இது குறித்து வளைகாப்பு நடத்திய பழனி, மணிகண்டன்,ரமேஷ் இளமதி கூறுகையில், ஊருக்கு வெளியே உள்ள டாஸ்மாக் கடையில் லட்சக்கணக்கில் சரக்குகளும் பணமும் இருக்கும்.
இரவு நேரங்களில் இவற்றை பாதுகாக்க ஆட்கள் சென்று வந்தனர். இந்த நாய் வந்ததில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் இங்குள்ள கடைக்கும், பாருக்கும் அருகில் யாரும் நுழையவே முடியாது. அந்த அளவுக்கு சிறப்பான காவல்பணியை செய்துவந்தது. அதனால் தான் இதற்கு நன்றி கடனாக மனிதர்களின் முதல் பிரசவம் நல்ல படியாக நடக்க வளைகாப்பு செய்வது போல செய்தோம் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.