சென்னையில் ரயில், சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு- பயணிகள் தவிப்பு #bharatbandh
சென்னை: நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக சென்னையில் இன்று தொழிற்சங்கங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். கிண்டியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடற்கரை - தாம்பரம் இடையேயான புறநகர் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டது.
தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 10 தொழிற்சங்கங்கள், பொதுத்துறை வங்கிகள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 18 கோடி ஊழியர்களும், 6 லட்சம் வங்கி ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய, மாநில தொழிற்சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்க்ளை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் பீடித் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆங்காங்கே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள பல்லவன் இல்லம் முன்பு தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் போலீசார் தர தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.
சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் திரளாக வந்து ரயிலை மறித்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து தண்டவாளங்களிலும் ஏராளமானோர் அமர்ந்து மறியல் செய்ததால் எந்த ரயிலையும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தொழிற்சங்கத்தினர் அந்த இடத்தைவிட்டு வெளியேறாததால், அவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தண்டவாளத்தை விட்டு அகற்றினர். தண்டவாளத்தை விட்டு வெளியேற மறுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகே ரயில்கள் புறப்பட்டுச் சென்றன. இதன் காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையே சுமார் அரை மணிநேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும், பஸ்கள்- ரயில்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வேலை நிறுத்தம் காரணமாக ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications