குழந்தை இல்லை என்பதால் 2வது திருமணம் செய்வது மனிதாபிமானமற்ற செயல்: சென்னை ஹைகோர்ட்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ் பிள்ளை. இவரது மனைவி சுவர்ணத்தம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதையடுத்து, தன் கணவர் 2வது திருமணம் செய்துகொள்ள சுவர்ணத்தம்மாள் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அப்போது, அவர் குடியிருக்கும் வீட்டை சுவர்ணத்தம்மாள் பெயருக்கு எழுதி வைத்த தர்மராஜ் பிள்ளை, மனைவி மறைவுக்கு பின் அந்த வீடு தனக்கு சொந்தமாகிவிடும் என்று ஒப்பந்த பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து ஜெயலட்சுமியம்மாள் என்பவரை தர்மராஜ் பிள்ளை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தர்மராஜ் பிள்ளை மரணமடைந்ததை தொடர்ந்து, தனக்கு வழங்கப்பட்ட வீட்டை கலியபெருமாள் என்பவருக்கு சுவர்ணத்தம்மாள் விற்பனை செய்தார்.
இதை எதிர்த்து விருத்தாசலம் சிவில் நீதிமன்றத்தில் 2-வது மனைவி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘தர்மராஜ் பிள்ளை வழங்கிய வீட்டை சுவர்ணத்தம்மாள் அனுபவிக்கலாமே தவிர, விற்பனை செய்ய அவருக்கு உரிமை இல்லை. எனவே, அந்த வீட்டை விற்பனை செய்ததை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட சிவில் நீதிமன்றம் வீட்டை விற்பனை செய்தது செல்லாது என்று 1986-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இத் தீர்ப்பை எதிர்த்து வீட்டை வாங்கிய கலியபெருமாள் கடலூர் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த செசன்சு நீதிமன்றம், வீட்டை விற்பனை செய்தது சரிதான் என்று கூறி கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது மனைவி ஜெயலட்சுமியம்மாள் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.விமலா, திருமணத்துக்கு பின்னர் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் இந்த சமுதாயம் அவளுக்கு ஏராளமான அவமானங்களையும், துன்பங்களையும் ஏற்படுத்துகிறது. குழந்தை இல்லை என்ற ஒரு காரணத்துக்காக தம்பதியர்கள் பிரிந்துவிடுகின்றனர். குடும்ப உறவே சிதைந்து விடுகிறது.
குழந்தை பிறக்காததற்கு பெண் மட்டுமே காரணமில்லை. ஆணின் உடல் தகுதியின்மையும் காரணமாக இருக்கலாம். இதில் ஆண், பெண் இருவருக்கும் பொறுப்பு உள்ளது. பெண் மட்டுமே காரணமில்லை. மேலும், குழந்தை இல்லை என்பதற்காக 2வது திருமணம் செய்வது என்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்ததில், தனது கணவர் வழங்கிய சொத்தில் முதல் மனைவியான சுவர்ணத்தம்மாளுக்கு முழு உரிமையும் உள்ளது. அவர் அந்த நிலத்தை கலியபெருமாள் என்பவருக்கு விற்பனை செய்தது செல்லும். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications