மேட்டூர்: 30 ஆண்டுகாலப் போராட்டத்தில் கிடைத்த சாலை - கேக் வெட்டி மக்கள் கொண்டாட்டம்!
மேட்டூர்: மேட்டூரில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார்சாலைக்கு கேக் வெட்டி அப்பகுதி மக்கள் பிறந்தநள் கொண்டாடியுள்ளனர்.
மேட்டூர் சட்டசபை உறுப்பினர் நிதியின் மூலம் ரூ.12 லட்சத்தில் மேட்டூர் எம்.எல்.ஏ. அலுவலகம் முதல் மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் வரை உள்ள தார்சாலை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த தார்சாலை அமைக்கப்பட்டதற்காக கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இருபுறத்திலும் மரங்கள் உடன்கூடிய தார் சாலை போன்று வடிவமைக்கப்பட்டிருந்த கேக் வெட்டப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட மேட்டூர் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன், கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் எஸ்.ஆர்.பார்த்திபன் கூறியதாவது :-
புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையை சீர்செய்ய கோரி சுமார் 30 ஆண்டுகளாக மேட்டூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த சாலை ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த பகுதி மக்கள் புதியதாக உருவாக்கியுள்ள இந்த சாலைக்கு பிறந்த நாள் விழா போன்று கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் மாலதி, மேட்டூர் நகர்மன்ற உறுப்பினர் சிவதைலாம்பாள், தே.மு.தி.க. நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் தே.மு,தி.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.