தாமரை நிச்சயம் மலரும்.. தமிழில் பேசி வாக்கு சேகரித்த.. பாஜக தலைவர் ஜே பி நட்டா
காரைக்கால்: திருநள்ளாறு தொகுதியில் பிரசாரம் செய்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, அங்குத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்து தாமரை மலரும் என தமிழில் பேசினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் பல்வேறு தலைவர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் கே.பி.நட்டா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தாமரை மலரும்
திருநள்ளாறு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரனை ஆதரித்து தேசிய தலைவர் ஜே.பி நட்டா பிரச்சார வாகனத்தில் நின்றபடி பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அங்குத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்து தாமரை மலரும் என தமிழில் பேசினார். இதனைத் தொடர்ந்து திருநள்ளாறு முக்கிய வீதிகள் முழுவதும் அலங்கார வாகனத்தில் நின்றபடி இருபுறமும் இருந்து மக்களைப் பார்த்துக் கையசைத்தபடி தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
வளர்ச்சிப் பாதை
அதைத் தொடர்ந்து திருநள்ளாறு தேரடி எதில் பேசிய ஜேபி நட்டா, புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொதுமக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
காங்கிரஸ் அரசு
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் அரசு ஊழல் அரசாக இருந்ததாக அவர் விமர்சித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அரசு செயல்படாத அரசாக இருந்தது என்றும் சாடினார். காங்கிரஸ் அரசில் இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்கப்பட்டு இருந்தனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
ஜே பி நட்டா வேண்டுகோள்
வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்குப் புதுவை மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.