பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி ? ஜவடேகரை சந்தித்தார் சரத்குமார் !
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகரை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை, இன்னொரு புறம் வேட்பாளர் நேர்காணல் என தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக, தேமுதிக, பாமக, உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இதுவரை இந்த மூன்று கட்சிகளும் கூட்டணியில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஆனாலும், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.
இந்த சூழலில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று சென்னை வந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் கூட்டணி குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், புதிய நீதிகட்சி ஏ.சி.சண்முகம், இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சதக்கத்துல்லா, இந்திய மக்கள் கட்சி நிறுவனர் தேவநாதன் ஆகியோருடன் கூட்டணி தொடர்பாக ஜவடேகர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஜவடேகரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாஜக கூட்டணியில் இணைய சரத்குமார் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி விலகுவதாகவும். தேர்தலில் அதிக இடங்கள் அளித்தாலும் சரி இனி அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று சரத்குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.