பேசாம கட்சியை எங்க கூட சேர்த்திருங்களேன்.. விஜயகாந்த்துக்கு யோசனை சொல்லும் பாஜக!
சென்னை: எதிர்கால நலனை கருத்தில் கொண்டு உங்களது தேமுதிகவை எங்களுடன் சேர்த்து விடுங்கள். அடுத்த சட்டசபைத் தேர்தலில் உங்களையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து தீவிரமாக உழைக்கிறோம் என்று விஜயகாந்த்துக்கு பாஜக தரப்பிலிருந்து ஒரு யோசனை போயுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆந்திராவில் தனிக் கட்சி தொடங்கி தனி ஆவர்த்தனம் செய்து, கட்சியை நடத்த முடியாமல் தத்தளித்து வந்த சிரஞ்சீவியை இப்படித்தான் காங்கிரஸ் கட்சிக்குள் இழுத்தது. அதே பாணியில் தற்போது விஜயகாந்த்தையும் தன் பக்கம் இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
ஆனால் எதற்கெடுத்தாலும் டென்ஷனாகும், யார் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாகவே செயல்பட்டுப் பழக்கப்பட்டுப் போய் விட்ட, யாருக்கும் அடங்காதவராக பழகிப் போய் விட்ட விஜயகாந்த், இந்த ஆசை காட்டலுக்குப் பணிவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.
தனித்து சில தேர்தல்
ஆரம்பத்தில் விஜயகாந்த்தின் ஸ்டார்ட்டிங் பிரமாதமாகத்தான் இருந்தது. அவர் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகளும் இருந்தது. ஆரம்பத்தில் தொடர்ந்து தனித்தே போட்டியிட்டு தன் மீதான மக்களின் எதிர்ப்பார்ப்பையும் பூரணமாக வெல்லத் தொடங்கினார் விஜயகாந்த்தும்.
வாக்கு வங்கி சேர்ந்த பிறகு...
ஆனால் தேமுதிகவுக்கென்று ஒரு வாக்கு வங்கி உருவானதும் அப்படியே மாறிப் போனார் விஜயகாந்த். நம்ம விஜயகாந்த்தா இது என்று அத்தனை பேரும் பார்த்து சிரிக்கும், கேலி பேசும் அளவுக்கு அவரது நிலைமை மாறிப் போனது. சுத்தமாக மாறி விட்டார் விஜயகாந்த். மாற்று அரசியல் தலைவராக இருப்பார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு, தான் வழக்கமான அரசியல்வாதிகளை விட மோசமானவன் என்பதை அவரே நிரூபித்து விட்டார்.
பேரமென்றால் பேரம்.. உலக பேரம்
வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு பேரத்தில் குதித்து விட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது தேமுதிகவை இழுக்க திமுகவும் முயன்றது. அதிமுகவும் முயன்றது. இருவருடனும் பேரம் பேசியது தேமுதிக. இதில் அதிமுக வின் பேரம் படிந்து வந்ததால் அங்கு போய்ச் சேர்ந்தது. அத்தோடு அதன் அரசியல் 'கொள்கை' செத்துச் சுண்ணாம்பாகி விட்டது.
வாய்ச் சண்டை.. நாக்கு மடிப்பு.. ரகளைப் பேச்சு
ஆனால் கூட்டணி ஏற்பட்ட வேகத்திலேயே கூட்டணி உடைந்து போனது. சட்டசபையில் விஜயகாந்த் நடந்து கொண்ட விதம் அவரைப் பற்றி அதற்கு முன்பு வரை இருந்த அத்தனை எண்ணத்தையும் தவிடுபொடியாக்கும் வகையில் அமைந்தது. விஜயகாந்த் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மக்கள் நம்பிக்கையும் அத்தோடு தகர்ந்து போனது.
அடாவடி தலைவர்
அதன் பிறகு வெளிப்படையாகவே மோசமான தலைவராக நடந்த கொள்ள ஆரம்பித்தார் விஜயகாந்த். பத்திரிக்கையாளர்களைத் திட்டுவது, அடிக்க முற்படுவது, கோபமாக பேசுவது, சரியாக பதிலளிக்காமல் போவது என்று அவரது போக்கும் மாறிப் போனது.
காங்கிரஸ் - பாஜகவுடன் நடத்திய 'மாட்டுத் தரகு'
அதன் பிறகு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது ஒரே நேரத்தில் காங்கிரஸ், பாஜக, திமுக என சகல கட்சிகளுடன் சரமாரியாக பேரம் பேசி அனைவரையும் அதிர வைத்தது தேமுதிக. இந்தக் கூட்டணிக்காக உழைத்த தமிழருவி மணியனே வெட்கிப் போகும் அளவுக்கு நிலைமை போனது.
காலிப் பெருங்காய டப்பா..
இப்போது சுத்தமாக தேமுதிகவின் செல்வாக்கு குலைந்து போய் விட்டது. இனியும் மக்கள் முன்பு தைரியமாக நின்று, பேசும் அளவுக்கு அக்கட்சி இல்லை. இவரை நம்பி இனி யாரும் ஓட்டுப் போடுவார்களா என்றும் தெரியவில்லை. அப்படிப்பட்ட நிலைக்கு அதிமுக தேமுதிகவைத் தள்ளி விட்டுள்ளது.
பலவீனத்தில் கூர் பார்க்கும் பாஜக
இந்த நிலையில்தான் மக்களிடமிருந்து தனித்து விடப்பட்டுள்ள தேமுதிகவை, அதன் பலவீனத்தைப் பயன்படுத்தி தன் வசப்படுத்த பாஜக முயல்வதாக கூறுகிறார்கள்.
இங்க வாங்க.. கட்சியை கலைச்சிருங்க
மறுபடியும் ஒரு பேரம் இதுதொடர்பாக தொடங்கியுள்ளதாம். அதாவது தேமுதிகவை பாஜகவுடன் இணைத்து விடுங்கள். வரும் சட்டசபைத் தேர்தலில் நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர். உங்களது வெற்றிக்கு நாங்கள் உத்தரவாதம். என்று பாஜக தரப்பில் விஜயகாந்த்துக்கு ஆசை காட்டப்பட்டுள்ளதாம்.
கன்னத் தடவலுக்கு அதுதான் அர்த்தமோ...
இதற்காகத்தான் டெல்லிக்கு விஜயகாந்த் போயிருந்தபோது மோடி அத்தனை ஆசை ஆசையாக விஜயகாந்த் கன்னத்தைத் தடவியும், கட்டிப்பிடித்தும், கொஞ்சியும் அன்பு காட்டியதாகவும், அத்தனை பேரையும் விட்டுவிட்டு தோற்றுப் போன கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்த்தையும், அவரது மனைவி பிரேமலதாவையும் பாராட்டிப் புகழ்ந்தார் என்றும் கூறுகிறார்கள்.
என்ன முடிவெடுப்பார் பிரேலமதா...
தேமுதிகவைப் பொறுத்தவரை விஜயகாந்த் எடுக்கும் முடிவு என்பதை விட பிரேமலதாவின் முடிவும், சுதீஷின் முடிவும்தான் முக்கியமானதாக இருக்கும் என்பதால் இந்த ஆஃபர் குறித்து இந்த மூன்று குடும்ப உறுப்பினர்களும் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
ஆனார் தேமுதிகவினர் மத்தியிலோ, மறுபடியும் நம்மை அடகு வைக்கப் போகிறார்கள். தயாராகிக் கொள்வோம் என்ற புலம்பல் எழத் தொடங்கியுள்ளதாம். ஆனால் அதுவரை அம்மா கட்சியை விட்டு வைத்திருப்பாரா என்ன... இல்லை திமுகதான் அமைதியாக இருக்குமா.. பொறுத்திருந்து பார்க்கலாம் வேடிக்கையை.