தேமுதிகவை நம்பி ஏமாந்து.. சரத்தையும் பறி கொடுத்து.. ஒரே நாளில் பாஜகவுக்கு 2 'ஹார்ட் அட்டாக்'!!
சென்னை: பாஜகவின் நிலை ரொம்பப் பரிதாபம். இன்று மட்டும் அக்கட்சிக்கு 2 "ஹார்ட் அட்டாக்". முதலில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்த செய்தி வந்தது. இப்போதோ வாலண்டியராக வந்து சேர்ந்த சரத்குமாரை, அதிமுகவுக்குப் பறி கொடுத்து நிற்கிறது பாஜக.
ஒரே நாளில் இப்படி அடுத்தடுத்து நடந்த பரபரப்பு நிகழ்வுகளால் தமிழக தேர்தல் களம் படு சூடாக காட்சி தருகிறது. அடிக்கும் வெயிலை விட நடக்கும் அரசியல்தான் படு ஹாட்டாக இருக்கிறது.

இதில் இன்று பாஜகவுக்கு அடுத்தடுத்து இரு பெரும் ஏமாற்றங்கள் வந்து சேர்ந்தன. தேமுதிக கொடுத்த ஷாக் எதிர்பார்த்ததுதான் என்றால், சரத்குமார் விவகாரத்தை அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் சரத்குமார் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அதே கூட்டணியில்தான் விஜயகாந்த்தும் அப்போது இடம் பெற்றார். இதில் விஜயகாந்த் சீக்கிரமே கூட்டணியை விட்டு விலகினார். சரத்குமார் சமீபத்தில் வெளியே வந்தார்.
வந்தவர் அதிரடியாக பாஜகவுக்குத் திரும்பினார் பாஜக அணியில் இடம் பெறப் போவதாக அறிவித்தார். அந்த மேட்டர் அத்தோடு முடிந்து போனது. அதன் பிறகு ஊர் உலகின் கவனமெல்லாம் விஜயகாந்த் பக்கமே திரும்பியிருந்தது.
இந்த நிலையில்தான் இன்று தேமுதிக,மக்கள் நலக் கூட்டணிக்குப் போன சம்பவம் நடந்தது இதை பாஜக கிட்டத்தட்ட எதிர்பார்த்திருந்தது. எனவே பெரிதாக அதிரவில்லை. ஆனால் சரத்குமார் திடீரென அதிமுகவால் கடத்தப்படுவார் என அது சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாஜக கூட்டணிக்கு வந்து விட்ட அவரை திடீரென ஜெயலலிதா அழைக்க, சரத்குமார் சட்டென கிளம்பி மின்னல் போல போயஸ் கார்டன் போய்ச் சேர்ந்ததை பாஜகவினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தேமுதிகவும் இல்லை. வந்து சேர்ந்த, சற்றே பிரபலமான சரத்குமாரும் இப்போது இல்லை என்ற செய்தி பாஜக முகாமுக்கு மிகப் பெரிய சோகத்தையும், ஏமாற்றத்தையும் நிச்சயம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போதைய நிலையில் புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி என ஒரு சில ரொம்பக் குட்டிக் கட்சிகள்தான் பாஜகவுடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications