பாஜகதான் புகார் அளித்துள்ளது.. கேரளா போலீஸ் விசாரணை பற்றி சீமான் விளக்கம்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்: பாஜக கட்சியினர் கொடுத்த புகாரின் பேரிலேயே கேரளா போலீஸ் தங்களை விசாரணை செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.
கேரளாவில் வெள்ளம் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரண பொருட்கள் வழங்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேரளாவிற்கு இன்று காலை சென்றுள்ளார்.
ஆனால் செல்லும் வழியில் கோட்டயத்தில் சீமான் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டயம் போலீசார் அவரிடம் 2 மணி நேரம் விசாரித்தனர்.போலீஸ் விசாரணைக்கு பின் சீமான் விடுவிக்கப்பட்டார்.
தற்போது சென்னை திரும்பி உள்ள சீமான் இதுகுறித்து விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். கேரளாவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது பற்றி சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், கேரளா சென்றபோது காலையில் வாகனத்தை மறைத்து போலீஸ் விசாரித்தனர். நாங்கள் எடுத்து சென்ற நிவாரண பொருட்களை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இறக்கி வைக்க சொன்னார்கள். நெரிசல் காரணமாக மக்களிடம் சென்று கொடுப்பது கஷ்டம் என்றனர்.
ஆனால் எங்களை பாராட்டினார்கள். தமிழர்களை கேரளா போலீசார் பாராட்டினார்கள். நாம்தான் உதவி செய்கிறோம் என்று கூறினார்கள்.
ஆனால் புகார் வந்துள்ளது விசாரிக்க வேண்டும் என்று போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். 2 மணி நேரம் எங்களை விசாரித்தனர். விடுதலை புலிகளா என்று கேட்டு, கொடியை பார்த்து விசாரித்தனர். புலிக்கொடியை பார்த்து அப்படி கேட்டு உள்ளனர்.
சிறிய விசாரணைக்கு பின்விட்டுவிட்டனர். பாஜகதான் புகார் அளித்ததாக போலீசார் கூறினார்கள். அவர்கள்தான் போலீசிடம் நாங்கள் வருவது குறித்து தகவல் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.