அதிமுகவை உடைக்கும் திறமை என்னிடம் உள்ளது.. சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு பேட்டி
பாஜகவும், காங்கிரஸும் அதிமுகவை உடைக்க முயல்வதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சு.சுவாமி "இது ஒரு தவறான கருத்து. இருகட்சிகளிடமும் அந்த திறமை இல்லை.
சென்னை: எம்.எல்.ஏக்களை பிரித்து அதிமுகவை உடைக்கும் திறமை தன்னிடம் இருப்பதாகவும், அது தமிழக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் இல்லை என்றும் கூறியுள்ள பாஜக ராஜ்யசபா எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
'தி இந்து' நாளிதழுக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்த சிறப்பு பேட்டியில் இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதால்தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த பல கேள்விகள் தொடரும் என்று தெரிவித்துள்ள சுவாமி, "சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, நர்சுகளுடன் அவர் பேசியதாக சொல்லப்பட்டது, உண்மை எனில் அவரது குரலை கட்சித் தொண்டர்களுக்காக பதிவு செய்திருக்கலாமே" என்றும் அவர் தெரிவித்தார்.
அங்கு நடந்த தவறுகளை விசாரித்து, அதற்கான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ள சுவாமி, தனக்கு அப்பல்லோ, தமிழக போலீஸ் அதிகாரிகள் என பலதரப்பினரின் தொடர்பு உண்டு என்றும், இவர்களிடம் கிடைக்கும் ஆதாரத்திலும் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.
குடும்பத்தாருக்கே சொத்து
ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு இனி யார் வாரிசு, என்ற கேள்விக்கு அளித்த பதிலில், ஜெயலலிதாவின் குடும்பத்தார் தான் அவரது சொத்துகளுக்கு வாரிசாக முடியும் என தெரிவித்துள்ளார்.
சசிகலா தேர்வாவதில் சிக்கல் இல்லை
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க நடக்கும் முயற்சிகள் குறித்த கேள்விக்கு, "ஜனநாயக முறைப்படி கட்சி தான் ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தால் அதை எதிர்க்க யாருக்கும் சட்டத்தில் இடம் இல்லை" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுடன் விரிசல்
ஜெயலலிதாவுடனான உங்கள் நட்பில் விரிசல் ஏற்பட காரணம் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த, சு.சுவாமி, "இந்த கேள்விக்கான பதில் எனக்கும் இன்றுவரை தெரியவில்லை என்றும், வெளியில் எங்காவது பார்த்தால் நல்ல முறையில் பேசுவார். என்னை கொடநாடு எஸ்டேட்டுக்கு காலை உணவுக்கு அழைத்தார். அப்போது அத்வானிக்காக நான் அவரிடம் பேசினேன். இதற்கு அவர் ‘பாஜகவை விட தன்னிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன. அவருக்காக நான் எதையும் செய்யத் தேவையில்லை' என மறுத்து விட்டார். தமிழகத்தில் அதிமுகவிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன என்பது உண்மை தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் பட்டபாடு
"திராவிட இயக்கத்தினரிடம் இருந்த சினிமாவில் ஜெயலலிதா ஒரு பிராமணப் பெண் என்பதால் அவரை அதிகமான துஷ்பிரயோகம் செய்திருந்தனர். இவர்களிடம் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் சினிமா துறையினர் மீது மிகவும் கோபமாக இருந்தார். இந்த நரகத்தில் தன்னை தாய் வேதவல்லி தள்ளிவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறி வருந்தியுள்ளார்" என்றும் சு.சுவாமி கேள்வியொன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு முகமில்லை
மற்றொரு கேள்விக்கு, பதிலளிக்கையில் "தமிழக கட்சிகளுக்கு தேர்தலில் முன்னிறுத்தி வாக்கு கேட்க ஒரு முகம் அவசியம். பாஜகவுக்கு தமிழகத்தில் தொண்டர்கள் அதிகம் என்றாலும், முன்னிறுத்த முகம் இல்லை" என கூறியுள்ளார். "பெரிய மாற்றம் நிகழ்ந்தால் தான் தமிழகத்தில் பாஜகவுக்கு விடிவு கிடைக்கும். தமிழக அரசியல் பொறுப்பு எனக்கு தரப்பட்டு முழு சுதந்திரம் அளித்தால் நான் பாஜகவை ஆட்சியில் அமர வைப்பேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திறமை உள்ளது
எம்எல்ஏக்களைப் பிரித்து பாஜகவும், காங்கிரஸும் அதிமுகவை உடைக்க முயல்வதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள சு.சுவாமி "இது ஒரு தவறான கருத்து. இருகட்சிகளிடமும் அந்த திறமை இல்லை. இந்த திறமை என்னிடம் உள்ளது. ஆனால், நான் அதை செய்ய மாட்டேன்" என கூறியுள்ளார்.
ஆளுநரா?
தமிழக ஆளுநராக நீங்கள் அமர்த்தப்படுவதாக கிளம்பிய செய்திகள் உண்மையா என்ற கேள்விக்கு, "ஒரு நண்பர் மூலமாக வந்த இந்த கோரிக்கையை நான் ஏற்க மறுத்து விட்டேன். ஒருமுறை, இந்தியா உட்பட சிலநாடுகள் இணைந்து உருவாக்கும் பிரிக்ஸ் வங்கிக்கு தலைவராக வேண்டும் என்றும் என்னிடம் பிரதமர் கேட்டார். இதற்கும் நான் மறுத்து விட்டேன். ஒரு தமிழனாக தமிழகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்கப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவன் நான். மீண்டும் எந்த வெளிநாட்டுக்கும் செல்ல மாட்டேன். இந்தியாவில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்" என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.