அமித் ஷா வரவேற்பு பேனர் அகற்றம்... சென்னையில் பரபரப்பு!
சென்னையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா -வை வரவேற்று வைக்கப்பட்டிருந்த 50 அடி உயர பிரமாண்ட பேனர்களை போலீசார் அகற்றியதால் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
சென்னை: பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வருவதை ஒட்டி, மெரினாவில் பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர். அந்த பேனர்கள் போக்குவரத்து இடையூறாக உள்ளது என்று கூறி மெரினா போலீசார் அகற்றினர்.
அமித் ஷா வரும் 22ம் தேதி சென்னை வருகிறார். அவரின் இந்த அரசியல் பயணம் பாஜகவினர் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்ற மாதம் ஆந்திரம் மற்றும் புதுவையில் அமித் ஷா அரசியல் சுற்றுப்பயணம் செய்தார்.
அப்போது அந்த மாநிலங்களில் பாஜக எப்படி வளரவேண்டும் என்பது குறித்து பாஜகவினருக்கு அவர் வகுப்பெடுத்துள்ளார். அதே போல தமிழகத்திலும் பாஜக வளர திட்டங்கள் வகுத்து கட்சியினருக்கு விளக்குவார் என்று கூறுகிறார்கள் பாஜக வட்டாரத்தில்.
இந்த நிலையில், மெரினா கடற்கரை சாலையில் அமித் ஷாவுக்கு வரவேற்பு கொடுத்து 50அடி உயர பிரமாண்ட பேனரை வைத்து அசத்தியிருந்தனர் பாஜக பிரமுகர்கள். ஆனால், அந்த பேனர்கள் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, களத்தில் இறங்கிய மெரினா காவல்துறையினர் பாஜக பேனரை அகற்றினர். மேலும், மாநகாட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று பேனர் வைத்துக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் பாஜகவினருக்கு அறிவுறுத்திள்ளனர்.