பாமகவுடனான எங்கள் கூட்டணி பலமாக உள்ளது: தமிழிசை சவுந்தர்ராஜன்
திருவள்ளூர்: பாமகவுடன் தங்களது கூட்டணி பலமாக இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில், பாஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழிசை பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
கேள்வி: வைகோ பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியபோது, அவரது கருத்தில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு என ராமதாஸ் கூறியுள்ளார். அப்படி பாமகவும் வெளியேறினால் பாஜகவின் நிலைபாடு என்ன ?
தமிழிசை: மோடி சிறந்த மனிதர் என உலகமே பாராட்டுகிற வேளையில், வைகோ மத்திய அரசின் மீதும், பிரதமர் மோடியின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆனால் பாமக அப்படி அல்ல. அவர்களுடன் எங்களது கூட்டணி பலமாக உள்ளது.
கேள்வி: தமிழக அரசின் செயல்பாடு குறித்து...
தற்போது தமிழகத்தில் அதிமுக அரசு முடங்கியுள்ளது. சட்டமன்றமும் செயல்படாமல் உள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டாக உள்ளது. இதனால் மக்கள் மாற்று சக்தியை எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்று சக்தியாக பாஜக இருக்கும்.
இதை பொறுக்க முடியாத சிலர் பாஜகவின் மீது அவதூறு பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் 2 சதவீதம் மக்கள் மட்டுமே மண்ணெண்ணெயை மூலம் சமையல் செய்கின்றனர். மற்றபடி வேறு வழியில் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என தெரியவந்துள்ளது. இதற்க்கான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தி வருகிறது. ஆனால் அதற்குள் ஏழைகளுக்கான மண்ணெண்ணையை மத்திய அரசு நிறுத்தி விட்டது என அவதூறு கூறுகின்றனர்.
பாஜக தமிழுக்கு எதிரான கட்சி என சிலர் சில அமைப்பினர் விமர்சனம் செய்கின்றனர். இதுபோன்ற விமர்சனங்களால் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராரும் தடுக்க முடியாது.
ஏழைகளுக்கு நேரடியாக சேரக்கூடிய சமையல் அவர்களுக்கு அதிக பயனைத் தரும். இதற்காக சில விதிமுறைகளை மத்திய அரசு கடைபிடிக்க வலியுறுத்தியுள்ளது. ஆனால் எரிவாயு ஏஜென்சி அதிகாரிகளின் இதில் பல்வேறு குளறுபடிகள் செய்து, முன்பு இருந்த திட்டமே நன்றாக இருந்தது போல் மக்களிடம் மாயையை ஏற்படுத்துகின்றனர்.
டிசம்பர் 20-ம் தேதி சென்னைக்கு பாஜகவின் தேசிய தலைவர் அமீத்ஷா வருகிறார். அன்று மாலை சென்னையில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். மறுநாள் 21-ம் தேதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்ருகிறார். உத்தரப்பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர் அமித்ஷா. தற்போது தமிழகத்தின் வெற்றிக்காக வருகிறார்.
வரும் 2016ல் பாஜக தமிழகத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் வகையில் அமித்ஷாவின் வருகை அமையும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.