விஜயகாந்த், அன்புமணி.. 2 முதல்வர் வேட்பாளர்கள்: இது பாஜகவின் ‘1 கல்லு -2 மாங்கா’ பிளான்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் அமைந்த அதே கூட்டணியை, சட்டசபைத் தேர்தலிலும் உருவாக்க பாஜக இன்னும் தீவிரமாக முயற்சித்துக் கொண்டே உள்ளது.
தேமுதிக இன்னும் கூட்டணி குறித்த தனது நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அக்கட்சியை தங்களுடன் கூட்டணி வைக்க திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை நேரடியாகவும், மறைமுகமாகவும் முயற்சித்து வருகின்றன.
ஏற்கனவே, தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எதற்கும் விஜயகாந்த் பிடி கொடுப்பதாக இல்லை. கூட்டணி குறித்துப் பேசும் தலைவர்களிடம் கட்சிக்குத் தகுந்தபடி அவர் நிபந்தனைகள் விதிப்பதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க பாமக தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை அறிவித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அக்கட்சி கறார் காட்டி வருகிறது.
2 முதல்வர் வேட்பாளர்கள்...
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கும் ஆசை பாஜகவிடம் உள்ளது. ஆனால், தேமுதிகவும், பாமகவும் முதல்வர் வேட்பாளர்களுடன் அடம் பிடிப்பதால் இரண்டு கட்சிகளையும் கூட்டணிக்கு இணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
புதிய தீர்வு...
எனவே, இதற்கு புதிய தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாம் பாஜக. அது தான் ''ஆளுக்குப் பாதி பார்முலா''..
ஆளுக்குப் பாதி...
பாஜகவுடன் தேமுதிகவும், பாமகவும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தால், இரண்டரை ஆண்டுகள் விஜயகாந்த் முதல்வராகவும், மீதி இரண்டரை ஆண்டுகள் அன்புமணி முதல்வராகவும் பதவி வகிக்கலாம் என பாஜக யோசனை தெரிவித்துள்ளதாம். இதைத் தான் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேட்கர் இரு கட்சிகளிடமும் சொல்ல நேற்று வந்தாராம். விஜய்காந்த்தை வழியிலாவது சந்தித்து இதை சொல்ல முடிந்தது. ஆனால், பாமக தரப்பிடம் நேரில் கூட அவரால் சொல்ல முடியவில்லை, அவர்கள் சந்தித்த மறுத்ததால்.
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா...
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறது பாஜக. அப்படியாக இந்த திட்டத்திற்கு தேமுதிக, பாமக இரண்டுமே சம்மதம் தெரிவித்தாலும், முதலில் யார் அரியணை ஏறுவது என புதிய பிரச்சினை நிச்சயம் வெடிக்குமே!