ஜெ. இடத்தில் ரஜினியை வைத்து பார்க்க துடியாய் துடிக்கும் பாஜக!
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது இடத்தில் ரஜினிகாந்தை கொண்டுவர பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது.
சென்னை: தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள பாரதிய ஜனதா கட்சி படாதபாடுபடுகிறது. ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் மூலம் நிரப்புவதற்கு அதிதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு குழப்பம் இருந்தது இல்லை. முதுபெரும் தலைவரான கருணாநிதி, முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இல்லை. அவருடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார்.
வெற்றிடம்
இதனால் தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகி இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் அதிமுகவோ திசைக்கு ஒரு கோஷ்டியாக பிளவுபட்டு நிற்கிறது.
பாஜக மும்முரம்
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் காலூன்றி விடுவதில் பாரதிய ஜனதா கட்சி படுதீவிரமாக இருக்கிறது. உடைந்து போன அதிமுக கோஷ்டிகள் அனைத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது பாஜக.
ரஜினி அரசியல் பிரவேசம்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். ஆகையால் அவரையும் வளைத்துப் போட்டுவிடுவது என பாஜக களமிறங்கியுள்ளது.
ரஜினி நிரப்புவார்
பாஜக தலைவர் அமித்ஷாவோ, ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என நாள்தோறும் வட இந்திய ஊடகங்களுக்கு பேட்டி தந்து வருகிறார். தமிழக பாஜக தலைவர்களும் தொடக்கத்தில் ரஜினிக்கு எதிராக பேசிவந்தாலும் இப்போது சிவப்புக் கம்பளத்தோடு தேவுடு காத்து கிடக்கிறார்கள்.
தொடரும் அழைப்பு
மத்திய அமைச்சர்கள் பலரும் ரஜினிகாந்த், பாஜகவுக்கு வரவேண்டும் என கெஞ்சுகிறார். ஆனால் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி மட்டுமே வைக்கலாம்; தனிக்கட்சியும் தொடங்கியதாக இருக்கும்; பாஜகவையும் பகைக்காமல் இருந்தது போல் இருக்கும் என்கிற கணக்கு போடுகிறார். இந்த அக்கப்போர் யுத்தத்தில் வெல்லப் போவது பாஜகவா? ரஜினியா என்பது விரைவில் தெரிந்துவிடும்.