மு.க.அழகிரியை வைத்து பல மாங்காய்களை அடிக்க திட்டமிடும் பாஜக!
சென்னை: மு.க. அழகிரியை தனது கூட்டணிக்குள் இழுத்து திமுக, அதிமுகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்க பாஜக திட்டமிடுகிறதாம்.
அழகிரி பார்க்க முரட்டுத்தனமாக, அவசரக்குடுக்கையாக இருந்தாலும், திட்டமிடுதல், காய் நகர்த்துதல், எதிரிகளை சாமர்த்தியாக சாய்த்தல் போன்றவற்றில் ஸ்டாலினை விட சிறந்தவர் என்பதால் அவரே தற்போது வலியக்க தன் பக்கம் சாய்ந்து வருவதால் இதைப் பயன்படுத்தி தென் மாவட்டங்களில் முடிந்த வரை லாபம் பார்க்க திட்டமிடுகிறதாம் பாஜக.
அழகிரியும் கூட சில நாட்களாக மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். எனவே அழகிரியுடன் கூட்டு சேர்ந்து தென் மாவட்டங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்த பாஜக முயலும் என்று தெரிகிறது.
சஸ்பெண்ஷனுக்குப் பிறகு சுறுசுறுப்பு
திமுகவிலிருந்து சஸ்பெண்ட் ஆன பின்னர் பக்கா அரசியல்வாதியாகி விட்டார் அழகிரி. அதாவது ஒரு திறமையான அரசியல்வாதியாக, முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டு விட்டு மிக புத்திசாலித்தனமாக செயல்பட ஆரம்பித்துள்ளார் என்று அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
அடுத்தடுத்துக் குழப்பி
திமுகவையும், இன்ன பிற கட்சிகளையும் தனது அடுத்தடுத்து நடவடிக்கைகளால் மிகத் தெளிவாகக் குழப்பி தான் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதை நிரூபித்து வருகிறார் அழகிரி என்கிறார்கள்.
என்ன சொன்னாலும் செய்யத் தயாராக தொண்டர்கள்
அழகிரி வசம் உள்ள ஆதரவாளர்கள், அவர் என்ன சொன்னாலும் செய்யக் கூடியவர்கள், அதுவும் 100 சதவீத முழுமையுடன் செய்யக் கூடியவர்கள், உயிரைக் கொடுத்து பணியாற்றுபவர்கள், கச்சிதமாக காரியம் ஆற்றுபவர்கள். அதை விட முக்கியமாக அதி தீவிர விசுவாசிகள் என்பதால் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளதாம் அழகிரி ஆதரவு வட்டாரம்.
கூட்டிக் கழித்துக் கணக்குப் போடும் பாஜக
இந்த சீனில்தான் பாஜக நுழைந்துள்ளது. அழகிரியின் ஆற்றல், திறமை, செயல்பாடுகளை நன்றாகவே அறிந்த தமிழக பாஜக தலைவர்கள், தற்போது அழகிரி தனியாக நிற்கும் நிலையில் அவரை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்று கருதுகிறார்கள்.
அழகிரி வந்தால் என்ன லாபம்
அழகிரி பாஜகவுக்கு வந்தால் பல லாபங்கள் உள்ளன. முதலில் அழகிரியின் நீக்கத்தால் கொதித்துப் போயிருக்கும் அவரது ஆதரவு வட்டத்தின் மூலம் கணிசமா்ன வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ள முடியும். அழகிரியின் திட்டமிடல்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். அழகிரியின் தேர்தல் கால பிரசார உத்திகள், வாக்காளர்களைக் கவரும் முறை, அணுகும் முறை, எதிரிகளை சமாளித்து நிற்கும் திறமை உள்ளிட்ட அவரது அனுபவங்களை அப்படியே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
திமுக - அதிமுகவை சமாளிக்க மிகப் பெரிய ஆயுதம்
அதை விட முக்கியமாக தென் மாவட்டங்களில் பலமாக இருக்கும் திமுக, அதிமுகவை சமாளிக்க அழகிரிதான் சரியான ஆள் என்றும் பாஜகவினர் கருதுகிறார்களாம். குறிப்பாக அழகிரி களத்தில் இறங்கி முழு வீச்சில் பணியாற்றத் தொடங்கினால் அவரை அதிகம் அறிந்த திமுகவினர் நிச்சயம் பின் வாங்கி விடுவர் என்று பாஜக கணக்குப் போடுகிறதாம்.
அழகிரிக்கு ஈடு கொடுக்க முடியாது
மேலும் தென் மாவட்ட திமுகவில் அழகிரி என்றால் இன்னும் கூட லேசான பயம் இருக்கிறது என்பதால் அழகிரியின் போர் வேகத்திற்கு முன்பு அவர்களால் நிச்சயம் ஈடு கொடுக்க முடியாது என்றும் பாஜக கணக்குப் போடுகிறதாம்.
தலைவர்களுக்கு ஆதரவாக
வைகோ, பொன் ராதாகிருஷ்ணன் என்று தென் மாவட்டங்களில் களம் இறங்கப் போகும் முக்கியத் தலைவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அழகிரி தயார் என்று கூறி விட்டாராம். எனவே பாஜக வினர் பெரும் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
முறைப்படி அறிவித்தால்
அழகிரியை தங்களது பங்காளி என்று பாஜக முறைப்படி அறிவித்தால் அழகிரியும் வெளிப்படையாக பாஜக கூட்டணிக்கு ஆதரவாக இறங்குவார் என்று கருதப்படுகிறது.
அழகிரி முக்கியத் தலைவர்.. பாஜக
இதற்கிடையே பாஜகவைச் சேர்ந்த ஒரு முக்கியத் தலைவர் கூறுகையில், தமிழகத்தில் அழகிரி முக்கியமான ஒருவர். அவரை தவிர்த்து தென் மாவட்டங்களில் எந்தக் கட்சியும் செயல்பட முடியாது. காரணம், அவர் ஒரு அபாரமான செயல்வீரர். சொல்வதை விட செய்வதில் அவருக்கு நிகர் யாருமே இல்லை. எனவே அவர் பாஜகவுக்கு துணை நின்றால் நாங்கள் மிகவும் மகிழ்வோம் என்றார்.
2001 தேர்தலில் கலக்கிய அழகிரி
2001ல் அழகிரி ஆதரவாளர்களுக்கு கட்சி சீட் கொடுக்காததால் கிட்டத்தட்ட 30 திமுக வேட்பாளர்களின் வெற்றியைக் காலி செய்யும் அளவுக்கு அதிருப்தியாளர்களை நிறுத்தி திமுக கண்ணில் விரல் விட்டு ஆட்டியவர் அழகிரி என்பதையும் அந்த பாஜக தலைவர் கூறுகிறார்.
விஜயகாந்த் - பாமகவை சமாளிக்க அழகிரிதான் பெஸ்ட்
அதை விட பாஜக முக்கியக் கவலையாக கருதுவது, இந்த விஜயகாந்த்தையும், பாமகவையும் சமாளிக்க முடியாததைத்தான். இவர்கள் படுத்திய பாட்டால் நொந்து போயிருக்கும் பாஜகவின் கண்களில் அழகிரி தாமரை போல மலர்ந்து காணப்படுவது ஆச்சரியம் இல்லைதான்.
பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...