தமிழகத்தில்... இன்னும் மலராமல் மொட்டாகவே இருக்கும் "தாமரை"!
சென்னை: தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளின் வாலாக மாறி விட்டது காங்கிரஸ் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி சமீபத்தில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கூறியிருந்தார். ஆனால் பாஜகவுக்கு அந்தப் "பாக்கியம்" கூட கிடைக்காத அவல நிலையே நிலவுவது பாஜகவினரையே கவலை கொள்ள வைத்துள்ளது.
தமிழகத்திலும் சரி, மேற்கு வங்கத்திலும் சரி பிற முக்கிய மாநிலங்களிலும் சரி பாஜகவின் நிலை அந்தோ பரிதாபம் என்றுதான் சொல்லும் நிலையில் உள்ளது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் அதன் நிலை ரொம்பப் பரிதாபம்தான்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது மெகா கூட்டணியை அமைத்தது பாஜக. ஆனாலும் என்ன புண்ணியம்... அதிமுகவுக்கு அமோக வெற்றி கிடைத்தது. திமுகவுக்கு மிகப் பெரிய தோல்வி கிடைத்தது. பாஜகவுக்குக் கிடைத்த லாபம், பொன். ராதாகிருஷ்ணனின் வெற்றி மட்டுமே.
ராசியில்லாத ராஜா
இப்போது சட்டசபைத் தேர்தலிலும் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அது துடியாத் துடித்தது. விஜயகாந்த்தை இழுத்து அதன் மூலம் பரபரப்பைக் கிளப்பி வாகை சூட அது முயற்சித்தது. ஆனால் கடைசி வரையிலும் அதன் திட்டம் நிறைவேறவில்லை.
வளராத சவலைப் பிள்ளை
பாஜக 1980ம் ஆண்டு உதயமானது. ஆனால் அதன் பிறகு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அது நன்றாக காலூன்றி விட்டது, வளர்ந்து விட்டது. ஆனால் தென்னகத்தில் மட்டுமே தேறாத நிலையில் உள்ளது. சவலைப் பிள்ளையாக இருக்கிறது.
கர்நாடகம் விதி விலக்கு
கர்நாடகத்தில் மட்டும் அது விதி விலக்காக எப்படியோ வளர்ந்து விட்டது. ஆட்சியையும் பிடித்து அனைவரையும் அதிசயிக்க வைத்தது. ஆனால் அக்கட்சியின் முதல் தென் மாநில முதல்வர் என்ற பெருமை கொண்ட எதியூரப்பாவுக்கு வந்த சிக்கல்களும், அவர் சந்தித்த வழக்குகளும் கட்சிக்குக் கெட்ட பெயரையேத் தேடித் தந்தன.
தமிழக நிலவரம்
தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக கடந்த 1980ம் ஆண்டு முதலே தொடர்ந்து தேர்தலைச் சந்தித்து வருகிறது. தனது முதல் தேர்தலில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு பத்திலும் டெபாசிட்டைப் பறி கொடுத்தது.
96ல் ஒரு உறுப்பினர்
1996ம் ஆண்டு இக்கட்சி 143 தொகுதிகளில் போட்டியிட்டது. வேலாயுதம் மட்டும் அதில் வென்றார். இவர்தான் தமிழக பாஜகவின் முதல் சட்டசபை உறுப்பினர் என்ற பெருமை பெற்றவர். கன்னியாகுமரியிலிருந்து இவர் சட்டசபைக்குள் நுழைந்தார்.
திமுக உதவியால் 4 பேர்
2001 சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தது பாஜக. அதாவது திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 4 இடங்களில் வெற்றி கிடைத்தது.
2006 முதல் சறுக்கல்
அதன் பின்னர் பாஜகவை பெரிய கட்சிகள் சீண்டவில்லை. 2006 தேர்தலில் 225 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. 2011ல் 204 தொகுதிகளில் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தது.
எடுபடாமல் போன இந்துத்துவம்
இந்தியாவின் பிற பகுதிகளில் பாஜகவுக்குக் கை கொடுக்கும் இந்துத்துவ முழக்கம் தமிழகத்தில் எடுபடுவதில்லை என்பதே பாஜக வளராமல் போனதற்கு முக்கியக் காரணம். மேலும் தனது வழக்கமான பல்லவியை கைவிடாமல் தொடர்ந்து அது பாடுவதும் இங்கு அதைக் கொள்வாரில்லை என்ற நிலைக்குக் கொண்டு போக முக்கியக் காராணம்.
அதிமுக - திமுகவைத் தாண்டி
திமுக, அதிமுகவைத் தாண்டி இங்கு இதுவரை யாரும் வரவில்லை, வர முயற்சித்தவர்களும் கூட வளர முயற்சிக்கவில்லை. இதன் காரணமாகவே காங்கிரஸ் முதல் பாஜக வரை அத்தனைக் கட்சிகளும் யாராவது ஒருவரிடம் அடிமை பார்க்கும் நிலையிலேயே நீடித்துக் கொண்டுள்ளன.
நல்ல தலைவர்கள் தேவை
பாஜக உண்மையிலேயே வளர வேண்டுமானால் கூட்டணி அமைப்பது மட்டும் போதாது. மாறாக நல்ல தலைவர்கள் அங்கு வர வேண்டும். அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்லும் தலைமை வர வேண்டும். மத, சாதிய அடையாளம் இல்லாத கட்சியாக அது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
மோடி இருந்தும் இல்லாமல் போன மேஜிக்
முன்பு ராஜீவ் காந்தியை வைத்து காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மேஜிக் செய்யப் பார்த்தது. அதேபோல பாஜகவும் மோடி வித்தையை இங்கும் காட்ட முயற்சித்துக் கொண்டுதான் உள்ளது. ஆனால் இதுவரை அதில் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்.