சர்க்கரை நோயளிகளுக்கு இனிப்பான செய்தி… 5 ரூபாயில் இனி சுயமாக டெஸ்ட் செய்யலாம்
சென்னை: நீரிழிவு நோயாளிகள் சுயமாக ரத்த சர்க்கரை பரிசோதனை செல்வதற்கான பட்டை இனி 3 முதல் 5 ரூபாய்க்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த மருந்துப் பட்டைகள் மக்களுக்குக் கிடைக்கும் என மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி செயலாளர் வி.எம்.கடோச் கூறியுள்ளார்.
இதன்மூலம் நீரிழிவினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களும் இனி சுயமாக எளிதில் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம்
பணக்காரர்களுக்கு மட்டுமே
நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அவர்களாவே சுய பரிசோதனை மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இதற்கு பரிசோதனைக் கருவியில் செலுத்தப் பயன்படும் ஸ்டிரிப்புகள் ரூ.30 முதல் ரூ.35 வரை பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இது பணக்காரர்களுக்கு மட்டுமே உரியதானதாக உள்ளது.
ஏழைகளுக்கு கிடைக்கும்
இனி ஏழை, நடுத்தர மக்களும் எளிதாக இவற்றை வாங்கி பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் புதிய ஸ்டிரிப்புகளை கண்டுபிடித்துள்ளது. இதன் விலை 3 ரூபாய் முதல் 5ரூபாய்க்குள் கிடைக்கும்
நாடுமுழுவதும்
எங்களது ஆராய்ச்சியில் கிடைத்த தொழில் நுட்பத்தை நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவின் செயலாளர் வி.எம்.கடோச் கூறியுள்ளார்.
ரத்த சர்க்கரை அளவு
ரத்த சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்வதற்காக தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்டிரிப்புகள் தற்போது விலை அதிகமானதாக உள்ளது. இதனை எல்லோராலும் வாங்கி பயன்படுத்த முடியாது.
100 மில்லியன் மக்கள்
நீரிழிவு நோயாளிகளின் தலைநகரமாக இந்தியா திகழ்கிறது. 2030ம் ஆண்டு 100 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்று அச்சம் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
மெல்லக் கொல்லும் நோய்
நீரிழிவு நோய் மெல்லக் கொல்லும் நோயாகும். கடந்த 2011ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி 50.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2012ம் ஆண்டு 61 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் 12 சதவிகிதம் நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வருகின்றன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எச்சில் மூலம்
ரத்தம் மூலம் சர்க்கரை அளவை அறிந்து கொள்ளும் பட்டைகளைப் போல எச்சில் மூலம் உடலின் சர்க்கரை அளவை பரிசோதனை செய்யும் கருவிகளும் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது இந்தியாவில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.