பொங்கல் பண்டிகை: பட்டினப்பாக்கத்தில் களை கட்டியது படகு போட்டி !
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் படகு போட்டி நடத்தப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரை அடுத்துள்ள பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தில் மீனவர்களுக்கான படகுப் போட்டி நடைபெற்றது. போட்டிக்கு முன்னாள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் தலைமையில் தாங்கினார். தமாகா வழக்கறிஞர் சத்யா உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
போட்டிக்கான தூரம் கடலிற்குள் 5 கி.மீ தொலை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து கரையை நோக்கி முதலில் வந்து கரையை அடையும் படகு வெற்றி பெற்றதாக கொள்ளப்படும். அதன்படி போட்டி துவங்கியவுடன் போட்டியில் கலந்து கொண்ட படகுகள் கரையை நோக்கி சீறிப் பாய்ந்து வேகமாக வந்தது. இதை கண்டுகளிக்க வந்திருந்த சுற்று வட்டத்தினர் அனைவரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
கரைக்கு வந்த முதல் மூன்று படகுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வரும் ஜனவரி 16 ஆம் தேதி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் டிவி, ப்ரிஜ் உள்ளிட்ட பரிசுகளை வழங்குகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், மற்ற அரசியல் கட்சிகளைத் தாண்டி தமாகா சற்று வித்தியாசமானது என்பதை எடுத்து கூறுவதற்காக இப்போட்டி நடத்தப்பட்டது என்றார். மேலும் மீனவர்களுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் துணை நிற்கும் என்றார்.