டாக்டர் எம்மாவின் உறவினர் மரணத்திலும் மர்மம்: 3 ஆண்டுக்கு முன் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு
சென்னை: கொலை செய்யப்பட்ட டாக்டர் எம்மாவைப் போல அவரது உறவினர் மரணத்திலும் மர்மம் நிறைந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து மூன்றாண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
எழும்பூரில் தனியாக வீட்டில் வசித்து வந்த டாக்டர் எம்மா கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். கொலையாளியின் உருவம் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் அவரது சகோதரி மகன் இம்மானுவேலை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட எம்மா உறவினர்களிடமும் தெரிவிக்காமல் சொத்துக்களை இம்மானுவேல் பெயருக்கு எழுதி வைத்து இருந்தார்.
இது தெரியாமல் இம்மானுவேல், எம்மா எழுதி வைத்தது போல் போலி உயில் தயாரித்து வைத்து இருந்தார். போலி ஆவணங்கள் தயாரித்ததாக அவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்மா கொலை தொடர்பாக மண்ணடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கோர்ட்டில் சரண் அடைந்தான். அவனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவனுக்கு இம்மானுவேலுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் இம்மானுவேலின் தம்பி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் ‘‘எனது தந்தை பிரான்சிஸ் பெர்னாண்டோ கடந்த 2011-ம் ஆண்டு இறந்தார். அவரது சாவிலும் சந்தேகம் உள்ளது. அவர் எழுதி வைத்த உயில் பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்ட பகுதியில் புதைக்கப்பட்ட பிரான்சிஸ் பெர்னாண்டோ உடலை தோண்டி எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மதியம் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பிரான்சிஸ் பெர்னாண்டோ உடலை தோண்டி எடுத்தனர்.
அதில் எலும்புக்கூடுகள் மட்டும் இருந்தன. அவற்றை டாக்டர்கள் பரிசோதித்தனர். முக்கிய எலும்புகள் ரசாயன பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
பிரான்சிஸ் பெர்னாண்டோ எழுதி வைத்த உயில் மீதும் தற்போது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றியும் தனியாக விசாரித்து வருகிறார்கள்.