சென்னை: ஐஎஸ்ஐ உளவாளி கைதுக்குப் பின் வெடித்த குண்டு…. காரணம் என்ன?
சென்னை: சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளிக்கும், இந்த குண்டுவெடிப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை 7.15 மணிக்கு இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்குப் பின்னால் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் ஜாகீர் ஹூசேன் என்ற ஐஎஸ்ஐ உளவாளியை போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அண்ணா மேம்பாலம், அமெரிக்க தூதரகம் ஆகியவற்றை தாக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இலங்கையில் இருந்து கடல்வழியே தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதற்காகவே சென்னையின் முக்கிய இடங்களை அவன் புகைப்படம் எடுத்துள்ளான்.
சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறையினரின் எச்சரிக்கைக்குப் பின்னர் போலீசார் நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ உளவாளி ஜாகீர் ஹூசைன் கைது செய்யப்பட்டான்.
உளவாளியின் கைதுக்குப் பின்னர், குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால், சென்னை நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பிற்காக காரணம் இதுவரைக்கும் தெரியவில்லை. இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களும், மக்கள் அதிகம் கூடும் கோவில்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.