சென்ட்ரல் ரயில் நிலையத்தை சல்லடை போட்டு அலசிய 24 வெடிகுண்டு நிபுணர்கள்
சென்னை: இன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை சுமார் 24 வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய ஸ்வாதி என்ற பெண் உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து 12 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதேபோல், மாநகர போலீஸ் படையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் 6 பேரும், ரயில்வே போலீஸ் படையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் 6 பேரும் குண்டு வெடித்த இடத்திற்கு வந்துசேர்ந்தனர்.
இவர்கள் தனி தனியாக சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் அதாவது வெடிகுண்டு வெடித்த ரயில் பெட்டிகளுக்குள்ளும், ரயில் பெட்டிகள் நின்ற தண்டவாளத்திலும் கிடந்த வெடிகுண்டு சிதறல்களை பாலீதீன் பைகளில் சேகரித்தனர்.
சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்த பின்னரே வெடித்தது எத்தகைய குண்டுகள் என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெடித்த குண்டுகள் எத்தகைய வெடிபொருட்கள் கலவைகளால் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிய வரும். அதைக் கொண்டே அந்த வெடிகுண்டுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா? அல்லது பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதா? என்பதை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சென்ட்ரலில் வெடித்தது பைப் வெடிகுண்டு தான் என்ற தகவல் பரவியது. ஆனால், அதனை போலீசார் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications