வெளிநாட்டிலேயே இருக்கும் பிரதமர் மோடியை முதலில் இந்தியாவுக்கு கூட்டி வாங்கப்பா: குஷ்பு
புதுச்சேரி: வெளிநாடுகளிலேயே இருக்கும் பிரதமர் மோடியை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள முருங்கப்பாக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ரங்கசாமி
காங்கிரஸ் கட்சியால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. காங்கிரஸ் மட்டும் அவரை அடையாளம் காட்டாமல் இருந்திருந்தால் அவர் வெறும் சாமியாகத் தான் இருந்திருப்பார். அத்தகைய கட்சிக்கே அவர் துரோகம் செய்துவிட்டார்.
என்.ஆர். காங்கிரஸ்
ரங்கசாமி தனது கட்சிக்கு தன் பெயரை சூட்டியுள்ளார். அவர் என்ன காந்தியுடன் சேர்ந்து தண்டி யாத்திரை சென்றாரா? அவர் என்ன சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டாரா?. காந்தி பெயரில் கூட கட்சி இல்லாதபோது இவர் எப்படி தனது பெயரை கட்சிக்கு சூட்டலாம்.
வாக்குறுதி
ரங்கசாமி தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அவர் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார். புதுச்சேரி மக்கள் இனியும் அவரையே நம்பி இருக்காமல் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி கஷ்டத்தில் இருந்தபோது நான் அதில் சேர்ந்ததாக கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் கஷ்டத்தில் இருந்தது இல்லை. அந்த கட்சிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள்.
மோடி
நாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்போம் என்று பாஜக கூறியது. ஆனால் பாஜகவினர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வெளிநாட்டிலேயே இருக்கும் பிரதமர் மோடியை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார் குஷ்பு.