30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்!
சென்னை: தமிழகத்தில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் என்னும் அரசு தொலைத் தொடர்பு நிறுவனம்தான் இந்தியாவில் செல்போன் இணைப்புகளுக்கும், இன்டர்நெட் தொலைத் தொடர்புகளுக்கும் முன்னோடி.
அத்தகைய நிறுவனத்தின் 9 ஆயிரம் தமிழக ஊழியர்கள், தங்களுடைய 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இன்று நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தினை பாதிக்கக் கூடிய தனியார் மயமாக்கலை எதிர்த்து போராடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் இது தொடர் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த முடிவானது டெல்லி தலைமையகத்தின் மூலமாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தின் வேலை நிறுத்தம் காரணமாக எந்த இணைப்புகளும் பழுது நீக்கப்படாது. மேலும், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையமும் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வேலை நிறுத்தத்தால் தமிழ்நாட்டில் பி.எஸ்.என்.எல்லின் தொலைபேசி, இன்டெர்நெட் மற்றும் செல்போன் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.