அரசு பஸ்கள் ஓடவில்லை..ஸ்தம்பித்தது சென்னை.. ரயில்களில் பெரும் கூட்டம்
சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் முன்கூட்டிய ஸ்டிரைக் காரணமாக சென்னையில் இன்று மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
நாளை அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால் இன்றே திடீரென போராட்டத்தைத் தொடங்கி விட்டனர். இதனால் மக்கள் சொல்லொணா அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னையில் அதிகாலை 5 மணியளவில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு பஸ் டிப்போக்கள் முன் கூடி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மாநகர போக்குவரத்து கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பும் ஏராளமான தொழிலாளர்கள் கூடியிருந்தனர்.
இதனால் பஸ் டிப்போக்களில் இருந்து பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை. இதையடுத்து டிப்போக்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். அதன் பிறகு பஸ்கள் வெளியே வந்தன. பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் அண்ணா தொழிற் சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
அவர்களைக் கொண்டும் தற்காலிக ஊழியர்களைக் கொண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்பட்டன. இருப்பினும் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
பல இடங்களில் பஸ் ஸ்டாப்புகளில் மக்கள் காத்துக் கிடந்ததைக் காண முடிந்தது. குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் அதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் பாதிப்பு பெரிய அளவில் இல்லாவிட்டாலும் நாளை முதல் பாதிப்பு அதிகம் இருக்கும்
சென்னையில் தனியார் பேருந்துகள் கிடையாது. முழுக்க முழுக்க அரசுப் பேருந்துகள் மட்டுமே. எனவே மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பஸ்கள் சரியாக ஓடாததால், ரயில்களுக்கு மக்கள் ஓடினர். இதனால் ரயில்களில் கடும் கூட்டம் காணப்பட்டது.