எங்கெங்கும் "கரன்சி" கலாட்டா.. தூத்துக்குடியில் வர்த்தகம் காலி.. நெல்லை டோல்கேட்டில் வாகன நெரிசல்!
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் தூத்துக்குடியில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. நெல்லையில் டோல்கேட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
நெல்லை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தூத்துக்குடி மார்க்கெட்டில் வியாபாரம் முடங்கியது. இதனால் வியாபாரிகள் தவிப்பில் உள்ளனர்.
பிரதமர் மோடி அதிரடியாக பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவி்த்தார். இந்த அறிவிப்பால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். எல்லோரிடமும் ரூ.100 அதிக அளவில் இருப்பதில்லை என்பதால் கடைகளில் சென்று அத்தியவாசிய பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனைத்து கடைகளிலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என எழுதி வைத்துள்ளனர். இந்த ரூபாய் நோட்டுகளை வாங்கினால் மாற்றுவதற்கு கால அவகாசம் இருந்தாலும் நாம் ஏன் மற்றவர்களிடம் வாங்கி வங்கிக்கு அலைய வேண்டும் என வர்த்தகர்கள் எண்ணுகி்ன்றனர். இதனால் கடைகளில் முக்கிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

வாங்க மாட்டோம்
தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் இரவு வரை வர்த்தகம் மந்தமாக இருந்ததை பார்க்க முடிந்தது. சாதாரண பெட்டி கடைகள் முதல் பெரிய அளவிலான டிபார்மென்டைல் ஸ்டோர் வரை ரூ.500, ரூ.1000ஐ வாங்க முடியாது என அறிவித்துள்ளனர்.

வெறிச்சோடிய வியாபாரம்
இங்கெல்லாம் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதன் காரணமாக சிறிய அளவிலான வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தொழில் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாமல் நிறுவனத்தை சேர்நதவர்கள் அவர்களின் வங்கி கணக்கை தெரிவித்தால் அதில் செலுத்தி விடுவதாக கூறுவதால் அங்கும் பிரச்சனை எழுந்து வருகிறது. இதே நிலைதான் அனைத்து பகுதிகளிலும் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை டோல்கேட்டில்
சில்லரை பிரச்சனையால் நெல்லை மாவட்ட டோல்கேட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அங்கும் பிரச்சினை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவித்தனர். நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, கயத்தாறு டோல்கேட்டில் அதிகாலை முதல் அங்கு வந்த வானங்களை சேர்நத்வர்கள் ரூ.500, ரூ.1000 நோட்டுகலை நீட்டினர். ஆனால் அதற்கான மீதி பணத்தை கொடுக்க சில்லரை இல்லாததால் டோல்கேட் ஊழியர்கள் அதை வாங்க மறுத்தனர். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் கட்டணம் இல்லாமல் செல்ல அனுமதிக்கப்பட்டது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானதால் வசூலான சில்லரையை கொண்டு ஊழியர்கள் சமாளித்தனர்.

இலவசம்
தற்போது நாடு முழுவதும் டோல் வசூலிப்பதை நிறுத்தி வைக்க மத்திய அமைச்சர் நிதின் கத்காரி உத்தரவிட்டுள்ளார். இதனால் தற்காலிகமாக டோல்டகேட்களில் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

நிம்மதியா சாப்பிட முடியலை
இது தவிர ஹோட்டல்களிலும் ரூ.500, ரூ.1000 சர்வ சாதாரணமாக நடமாடுவது வழக்கம். ஆனால் இரவு வரை பெரும்பாலான கடைகளில் ரூ.500, ரூ.1000ஐ பெறப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் இருந்தும் சாப்பிட கூட முடியாமல் பலர் தவித்தனர்.












Click it and Unblock the Notifications