இடைத் தேர்தல் ரத்து... ஆட்சியில் இல்லாமலேயே தமிழகத்தை ஆட்டிப் படைக்கத் துடிக்கும் பாஜக!
சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தல் நிச்சயம் ரத்து செய்யப்பட்டு விடும் என்பதை பாஜக தலைவர்கள் கடந்த 3 தினங்களாக உறுதியாகக் கூறி வருகின்றனர். கடைசியாக நேற்று இரவு சுப்பிரமணிய சாமியும் அதை கோடி காட்டி இருந்தார்.
அவர்கள் சொன்னதைப் போலவே இந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இத்தனை நாள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ரத்து செய்திருப்பது மோடி அரசின் பக்கா ட்ராமா என்பது அம்பலமாகியுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது வெறும் டம்மிதான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது மத்திய மோடி அரசு.
ஜெயலலிதா உடல் நலக் குறைவுற்று அப்பல்லோவில் சேர்ந்ததிலிருந்து மரணமடைந்த வரையிலான அத்தனை ரகசியங்களும் சசிகலா அன்ட் கோ மற்றும் மோடி அரசுக்கு நன்கு தெரியும். ஆனால் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல காட்டிக் கொண்டு, இதுவரை தமிழகத்தின் - அது ஓபிஎஸ் அரசாக இருந்தாலும் சரி, எடப்பாடி அரசாக இருந்தாலும் சரி- நிர்வாகத்தை வெளிப்படையாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது மோடி சர்க்கார்.
'இந்த இடைத் தேர்தலில் பணம் விளையாடுகிறது என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, மாநிலங்கள் மீதான மத்திய அரசின் சர்வாதிகாரத்தையே காட்டுகிறது. ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மாநில அரசின் நிர்வாகத்தில் இஷ்டம் போல தலையிட்டு விளையாடுகிறது மோடி அரசு. சட்டப்படி என்பது போய் பாஜக இஷ்டப்படி ஆட்சி நடக்க வேண்டும் என்பது எழுதாத சட்டமாகிவிட்டது,' என மக்களே வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஓ பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது, அவர் கோட்டையில் இருக்கும்போதே, தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தி அதிர வைத்த மோடி அரசு, இப்போது பதவியில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தி சில ஆவணங்களை - அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமலே - வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஒரு தலைவர் முதல்வராக இருந்திருந்தால், இதைச் செய்ய மோடி துணிந்திருப்பாரா? என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டாலும்கூட, இந்த தேர்தல் ரத்து, மத்திய அரசின் திட்டமிட்ட நாடகம் என்பது அம்பலமாகியுள்ளது.
'என்னதான் பாஜக குட்டிக் கரணம் அடித்தாலும், பாஜகவால் தமிழகத்தில் இம்மி கூட வளரவே முடியாது. அடுத்த நான்காண்டுகள் இப்படி குட்டிக் கரணம் அடித்துக் கொண்டிருக்கலாம். ஒரு வலுவான தலைமை அமைந்துவிட்டால், பாஜகவின் ஆட்டம் இங்கே அவ்வளவுதான்', என்பதே பொது வெளியில் பாஜக பற்றிய பார்வையாக உள்ளது.