16 வருடமாக சொத்து குவிப்பு வழக்கை சந்திக்கும் ஜெ. முதல்வராக தொடரலாமா?: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
சென்னை: 16 ஆண்டுகளாக சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை சந்தித்து வரும் ஜெயலலிதா, முதல்வர் பதவியில் தொடர முடியுமா என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
குற்ற வழக்குகளில் சிக்கிய எம்.பி., எம்.எல்.ஏ.க்களை அமைச்சராக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் கூறியிருந்தது. இதேபோல் ஊழல் வழக்கில் சிக்கியவர் முதல்வர் பதவி வகிக்கலாமா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே ஊழல் கண்காணிப்பு ஆணைய வழக்கில், அதன் தலைவர் அப்பழுக்கற்றவராக இருக்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசியல் சாசன அதிகாரத்தில் இருக்கும் முதல்வருக்கும் பொருந்தும். எனவே 16 ஆண்டுகளாக சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை சந்தித்து வரும் ஜெயலலிதா, முதல்வர் பதவியில் தொடர முடியுமா என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்த வேண்டும்.
மேலும் ஊழல், குற்றப் பின்னணி இல்லாதவர்களையே முதல்வராக தேர்வு செய்யும் வகையில் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.