ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் தாராளமாக போட்டியிடட்டும்.. ஆனால் ஜெயிப்பாரா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசி அணியின் வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர். கே. நகர் தொகுதி. இரண்டாவது முறையாக வெற்றி பெற்று முதல்வரானார். உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார். இதனையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக 3 பிரிவாக பிரிந்துள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா என அதிமுக தொண்டர்கள் 3 பிரிவாக உள்ளனர்.

விஐபி தொகுதி
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார் அப்போது முதலே ஆர்.கே.நகர் விஐபி அந்தஸ்து பெற்ற தொகுதியானது. 2016 சட்டசபை தேர்தலின் போதும் ஜெயலலிதா மீண்டும் போட்டியிட்டார். வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. 8 மாதம் மட்டுமே அந்த தொகுதியின் உறுப்பினராக இருந்தார் ஜெயலலிதா.

வேட்பாளர் யார்?
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நடந்து ஓராண்டிற்குள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. இந்த நிலையில் அதிமுகவில் சசி அணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிடிவி தினகரன்
ஆர்.கே.நகரில் அதிமுக சசி அணியின் சார்பாக வேட்பாளராக சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன் போட்டியிடக் கூடும் என்று கடந்த சில வாரங்களாகவே பேசப்பட்டது.
சசிகலா சிறை சென்றதை அடுத்து அதிமுகவை வழி நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். இவருக்கு கட்சியினர் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு உள்ளது என்பது இந்த இடைத்தேர்தல் மூலம் தெரிந்து விடும்.

கட்சி ஆலோசனை
ஆர்.கே.நகர் வேட்பாளர் பற்றிய கேள்விக்கு பதிலளித்த தினகரன், கட்சி ஆலோசனைக்குப் பின்னர் வேட்பாளர் யார் என்று அறிவிப்போம் என்று கூறினார். வேட்பாளராக டிடிவி தினகரனை அறிவித்தால் அவருக்கு வரவேற்பு எப்படியிருக்கும், ஆர்.கே. நகரில் அவரால் வெற்றி பெற முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் ஒருபக்கம் பலம் வாய்ந்த வேட்பாளரை அறிவிக்க உள்ளார். தீபாவும் போட்டியிடப்போவதாக கூறியுள்ள நிலையில் அதிமுக தொண்டர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்பதே இப்போதைய கேள்வி.

வெற்றி பெறுவாரா தினகரன்
டி.டி.வி.தினகரன் கடந்த1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதி எம்.பி.யாக இருந்தார். 2004ஆம் ஆண்டு பெரியகுளம் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா அவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்கினார். 2011ஆம் ஆண்டு சசிகலா உள்பட குடும்ப உறுப்பினர்களை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கும்போது தினகரனும் நீக்கப்பட்டார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலா இப்போது தினகரனை கட்சியில் சேர்த்து துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி உள்ளார்.

முதல்வர் கோஷம்
அடுத்த முதல்வர் தினகரன் என்ற கோஷம் இப்போதே ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஒருவேளை ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் முதல்வராக முன்நிறுத்தப்படுவாரோ என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ஆர்.கே.நகரில் தினகரன் தாராளமாக போட்டியிடட்டும், யாருக்கு வெற்றியை பரிசளிப்பது என்பதை ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் முடிவு செய்யட்டும்.












Click it and Unblock the Notifications