குற்ற வழக்குகளை அபிடவிட்டில் தெரிவிக்கணும்: தேர்தல் ஆணையம் உத்தரவால் கலக்கம்
நெல்லை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை அபிடவிட்டில் தெரிவிக்க தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் வேட்பாளர்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி ஓரே கட்டமாக லோக்சபா பொதுத் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடக்கிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுடன் அபிடவிட்டையும் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதில் வேட்பாளர் மீதான கிரிமினல் வழக்குகளை குறிப்பிட வேண்டும். அதாவது தண்டனை பெற்ற வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளர், அவரது மனைவி, குழந்தைகளின் வருமான வரி கணக்கு எண், வருமான வரி தாக்கல் செய்த நாள், அசையும், அசையா சொத்துகள், அவரது மனைவி, குழந்தைகள் பெயரில் அரசு, அரசு சாரா நிறுவனங்களில் வாங்கியகடன் விபரம், வேட்பாளர் மற்றும் மனைவியின் தொழில், அவர்களின் கல்வி தகுதி முதலியவற்றை அபிடவிட்டில் தெரிவிக்க வேண்டும்.
அபிடவிட்டில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் பூர்த்தி செய்யாமல் விடக் கூடாது. தேர்தல் நடத்தும் அலுவலர் அதை சரி பார்ப்பார். அப்போது பூர்த்தி செய்யாத இடங்களை பூர்த்தி செய்ய வலியுறுத்துவார். எல்லா கேள்விகளுக்கும் பதில் இல்லை, தெரியாது, பொருந்தாது என்றாவது தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவுரைக்கு பின்னரும் அபிடவிட்டில் பூர்த்தி செய்யாத இடங்கள் இருந்தால் அந்த வேட்பாளரின் விண்ணப்பம் உடனடியாக தள்ளுபடி செய்யப்படும்.
அபிடவிட்டை வேட்பு மனுவுடன் சேர்ந்து தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் மாலை 3 மணிக்குள்ளாவது தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதனால் குற்ற பின்னனியில் உள்ள வேட்பாள்கள் கதி கலங்கி போய் உள்ளனர்.












Click it and Unblock the Notifications